ஞாயிறு, 28 டிசம்பர், 2014

ஐய்யப்பன் விரும்பிய கன்னி ஸ்வாமி

ஐய்யப்பன் விரும்பிய கன்னி ஸ்வாமி

கார்த்திகை மார்கழி மாத காலங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், முக்கியமாக தென் இந்தியாவில் இருந்து பலர் சபரி மலைக்கு செல்ல வேண்டி மாலை அணிந்து, ஒரு மண்டல விரதம் இருந்து, இருமுடி சுமந்து, காடு, மலை ஏறி தரிசனம் செய்து, நெய் அபிஷேகம் செய்த மன நிறைவுடன் திரும்புவது வழக்கம். இப்படி சபரி மலை செல்பவர்களில் முக்கியமானவர்கள், முதல் முறையாக செல்லும் “கன்னி ஸ்வாமி” எனப்படுபவர்கள். அப்படி முதல் முறையாக வரும் “கன்னி ஐய்யப்பன்” ஸ்வாமிகளை சபரி மலை ஐய்யப்பனுக்கு மிக பிடிக்கும் என்பது ஐதீகம்.

அப்படி சபரி மலை செல்ல மாலை அணிந்து, ஒரு மண்டல விரதம் இருந்து, இருமுடி எடுத்து, மலை ஏறி சென்று ஐய்யப்பனை தரிசிக்க ஆசையோடு ஒரு கன்னி ஸ்வாமி தயாரானார். இவரை போல கள்ளங்கபடம் இல்லாத ஒரு கன்னி ஸ்வாமி இது வரை சபரி மலைக்கு சென்றதே இல்லை. மற்றவர்களைபோல் மனதில் எந்த விதமான சுய நல சிந்தனையும், பிரார்த்தனையும் இல்லாமல், அமைதி, ஆனந்தம், அடக்கம், ஐய்யப்ப தரிசனம் போன்ற உயர் நிலை எண்ண அலைகளோடு புறப்பட தயார் ஆனார் இந்த கன்னி ஐய்யப்பன்.

இந்த கன்னி ஸ்வாமி ஒன்றும் தானாக சபரி மலைக்கு போக வேண்டும் என ஆசைப்படவில்லை. ஐய்யப்ப ஸ்வாமிக்கு மட்டுமே உரித்தான சில கடமைகளை செய்ய இவரை போன்றோர் தேவை என “திருவிதாங்கூர் தேவஸ்வம்” போர்ட் விளம்பரம் செய்ததை அடுத்து இவரால் அதை செய்ய முடியும் என்ற மற்றவரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேறு வழியின்றி தானும் ஆசைப்பட்டு விட்டார். இதில் என்ன தவறு?

இவர் சபரி மலை செல்ல தயார் ஆனதை அந்த ஊரே வரவேற்றது. என்னைப்போல சிலரும் வாழ்த்தினர், ஆனந்த கண்ணீர் சொரிந்தனர். தம்மால் இயன்ற உதவிகளை செய்தனர். ஏனென்றால், இந்த கன்னி ஸ்வாமி சபரி மலை செல்ல பல விதமான வசதிகள் தேவைப்பட்டது. நிறைய பணம் தேவைப்பட்டது. 

பணம் ஒரு விஷயமே அல்ல,  “நீ செல்வதானால் நான் என் சொத்தையே தருகிறேனடா” என்று வரிந்து கட்டிக்கொண்டு பலர் வந்தனர். இப்படி வந்தவர்களில் ஹிந்து, கிறிஸ்தவ, இசுலாமிய மக்களும் அடக்கம். அவர்கள் இதை ஒரு மதம் சார்ந்த விஷயமாகவே காணவில்லை. மாறாக, அவன் மீது தமக்கிருந்த காதலால், பாசத்தால், உரிமையினால் மற்றும் அதை செய்வது தங்கள் கடமை என செய்ய நினைத்ததால் செய்தனர்.

ஆனால் இந்த அன்பு எல்லார் மனத்திலும் இருக்க வேண்டும் என்பது நியதி அல்லவே. அங்கும் தன் மிருக, வக்கிர புத்தியை காண்பித்தது சில மனிதம்.

அவன் வரக்கூடாது, அவன் வந்தால் நாங்கள் என்னாவது? அவன் விளம்பர பிரியன். அதனால் தான் அவனது சபரி மலை யாத்திரை இவ்வளவு விளம்பரப்படுத்தப்படுகிறது என்றெல்லாம் சொல்லி அவன் செல்வதை தடுக்க நினைத்த அற்ப மனித பதர்களின் சூழ்ச்சியை அவன் அறியாதே இருந்தான். பாவம் அவன். எப்படியாவது சபரி மலைக்கு சென்று விடவேண்டும் என்று விரும்பினானோ என்னவோ தெரியவில்லை, தன்னை பற்றியும், தன் மனம் பற்றியும் ஏசுபவர்களை குறித்து ஒன்றும் சொல்லவும் இல்லை, ஒன்றும் செய்யவும் இல்லை. அவனை ஏதோ பெரிய தீவிரவாதி, மற்ற உயிர்களுக்கு ஆபத்தானவன் என்பது போல ஒரு பத்திரிகை காரன் சீறினான். பிறகு தான் தெரிந்தது, தற்காலத்து பத்திரிகை தர்மம் போல அவன் கட்டுரைக்கு பின்னும் அவனது சொந்த விருப்பு வெறுப்பு கலந்தே இருந்தது என்று. 

பத்திரிகை செய்தி வந்தாலே போதும் கேரள மக்கள் “அர்த்தால்” “பந்து” என்று தொடங்கி விடுவார்கள், நம் வேலை சுலபமாக முடிந்து விடும் என்று நினைத்த “தேவஸ்வம் போர்டு” அமைப்பின் சில உறுப்பினர்களின் எண்ண எதிர்ப்பார்ப்பு தவிடுபொடி ஆனது. பொது மக்கள் போராடுவர், ஆனால் அந்த போராட்டத்தில் தமது மனதையும் கலப்பர் என அந்த உறுப்பினர்கள் எண்ணி இருக்கவில்லை. வேறு வகையில் அவனது யாத்திரையை முடக்க நினைத்தனர். அவன் வர கூடாது. வந்தால் கைது செய்யப்படுவான். ஏற்படப்போகும் அசம்பாவிதங்களுக்கு “தேவஸ்வம் போர்டு” பொறுப்பேற்காது என மார் தட்டி மிரட்டி கடிதம் அனுப்பியது. என்னவோ எல்லா விஷயத்திலும் வேண்டிய நடவடிக்கை எடுத்து விட்டதை போல ஒரு எண்ணம் இந்த தேவஸ்வம் போர்டு உறுப்பினர்களுக்கு.

அவன் சபரி மலை யாத்திரை போக வேண்டும் என ஆசை கொண்டவர்கள், “தேவஸ்வம் போர்டு” உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார்கள். அதில் அவன் தரிசனம் மட்டும் செய்து விட்டு திரும்ப அனுமதிக்குமாறும், அவன் யார் வம்புக்கும் தும்புக்கும் போக மாட்டான். அதற்கு நாங்கள் பொறுப்பு என்றும் கூறுகின்றனர். அதற்குள் விஷயம் ஊர் முழுதும் தெரிந்து விட்டது. இதற்க்கு மேல் நாம் அனுமதிக்கவில்லை என்றால் நம் முதுகு தோலை பொது மக்கள் பிய்த்து விடுவர் என உணர்ந்து கொண்டு தேவஸ்வம் போர்ட் உறுப்பினர் எனும் மனித சமுதாய மஹா மேதைகள், மனம் கனிந்து “சரி” என்கிறார்கள். இந்த செய்தியை கேட்டும் அவன் துள்ளி குதிக்கவில்லை, ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இவ்வளவு ஏன்? அவனுக்கு இந்த செய்தியை குறித்து தெரியவே தெரியாது. அவ்வளவிற்கு நல்லவன் அவன்.

ஒப்புதல் கிட்டியதை ஒட்டி நம் கதாநாயகன் சபரி மலைக்கு மாலை அணிகிறான். ஒரு மண்டலம் நோன்பு இருக்கிறான். சபரி மலைக்கு இருமுடி ஏந்தி செல்லவும் தயார் ஆகிறான். ஓ. இன்னும் கதா நாயகனை அறிமுகம் செய்யவில்லையா. இதோ.

இவன் பெயர் “சிறக்கள் மஹாதேவன்”. நிறம் கருப்பு. உயரத்திலும் பருமனிலும் அனைவரையும் கொள்ளை கொள்ளும் அழகு உடையவன்.

“சிறக்கள் மகாதேவன்” இருமுடி கட்ட கேரள மாநிலத்தில் உள்ள “திரு ஷிவ பேரூர்” எனப்படும் “திருச்சூர்” ஜில்லாவில் உள்ள அவனுக்கே பிரியமான “திருவம்பாடி” கோயிலுக்கு வருகிறான். “சபரி மலை” கோவிலில் ஐய்யப்பனை பூஜை செய்த “மூத்தேடுத்த சுகுமாரன் நம்பூதிரி” அவர்களின் திருக்கரங்களால் அவனுக்கு விரத மாலை அணிவிக்கப்பட்டு “மஹா தேவனின்” நெய் தேங்காய் நிரப்பப்படுகிறது.

இருமுடியை தலையில் வாங்கி தனது முதல் யாத்திரையை “மஹா தேவன்” தொடங்கி விட்டான். நேராக “வடக்கும்நாதன்” கோவிலுக்கு செல்கிறான், அங்கு கோவிலின் நாயகன் இல்லை. எனவே அடுத்துள்ள “பாரமேக்காவு” எனும் கோவிலுக்கு சென்று தொழுகை நடத்துகிறான். இந்த கோவிலின் பல போட்டிகளில் வென்றவன் அவன். “வடக்கும் நாதனின்” சொந்த குழந்தையாக வளர்ந்தவன், அவரிடமிருந்து ஒரு பிடி சோறு வாங்கி உண்ணாமல் சென்றால் அது சரி ஆகாது என்பதால் காத்திருக்கிறான் இரவு வரை. அவன் விரும்பியபடியே, வடக்கும்நாதன்  உண்ட சோறின் பாக்கி அவனுக்கு கிடைக்கிறது. சந்தோஷமாக உண்டு சற்றே ஓய்வெடுத்து மீண்டும் தனது யாத்திரையை தொடுங்குகிறான் “மஹா தேவன்”.

பலசாலி தான். ஆனாலும் நெடுந்தூரம் அவனால் நடக்க முடியாது என்பதால் ஒரு வண்டியில் ஏறி பயணத்தை தொடர்கிறான் மஹாதேவன். கன்னி சாமி ஆயிற்றே! எருமை கொல்லி மலையில் சென்று தர்ம சாஸ்தாவை, வாபரனை வணங்கி பேட்டை துள்ளி செல்ல வேண்டும் ஆதலால் அங்கு சென்று, குளித்து வணங்கி யாத்திரையை தொடர்கிறான். பல கோடி கன்னி ஐய்யப்ப சுவாமிகளை கண்ட எருமை கொல்லி மலை மக்களுக்கு ‘மஹா தேவனின்” சபரி மலை யாத்திரை ஒரு புது வித அனுபவம் ஆகிறது. அவர்கள் மனம் மிகுந்த சந்தோஷம் அடைகிறது. தன்னால் இயன்றவாறு பேட்டை துள்ளி தனது பயணத்தை தொடர்கிறான் மஹாதேவன்.

பம்பையில் வந்து, ஒரு சுகமான குளியலை போட்டு, மலை ஏற வேண்டும் என்பதால், ஏதோ கொஞ்சம் உணவை வயிற்றுக்குள் தள்ளி, தனக்கு பிரியமான கணபதி பகவானுக்கு ஒரு வணக்கத்தை வைத்து நடக்க தொடங்குகிறான். “நீலி” என்பவளின் பெயரால் அறியப்படும் அந்த நீலி மலை, மஹாதேவன் ஏறாத ஒரு மலை. என்னதான் பலசாலி ஆனாலும் சற்று திக்கு முக்காடித்தான் போனான். யார்தான் அந்த மலையில் நின்று மூச்சு வாங்காமல் ஏறி இருக்கிறார்கள்? எப்படியோ, எல்லாரையும் போல் மூச்சு முட்ட முட்ட மலை ஏறி வந்துவிட்டான் மஹா தேவன்.

பதினெட்டாம் படியின் முன் வந்து நின்றவனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. அவனை தரிசனம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு ஒரு சில தேவஸ்வம் போர்டு ஊழியர்கள். உண்மையான காரணத்தை நேருக்கு நேர் பேசினால், தங்களின் குட்டு வெளியாகிவிடும் என்பதால், முகம் காட்டாமல் ‘கட்ட பஞ்சாயத்து” செய்கிறார்கள். வெட்கம் கெட்ட மனிதம். பல மணி நேரம் அந்த பதினெட்டாம் படியின் முன் நிற்கிறான் மஹா தேவன். அவனுக்கு தெரியும், பதினெட்டு படி மேல் உள்ள தனது நாதனுக்கு தன்னை காண, தனக்கு தரிசனம் தர மிகுந்த ஆர்வம் என்று. ஆனாலும் இந்த அதிகார மிருகங்கள் விடவில்லை.

பல மணி நேர காத்திருப்புக்குப்பின், மஹா தேவன் கொண்டு வந்த இருமுடி வேறு ஒரு நபர் மூலமாக பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.

அந்த நெய் அபிஷேகம் செய்யும்போது, நெய் அபிஷேகம் செய்யும் நம்பூதிரியின் கண்களோடு சேர்ந்து அந்த ஐயப்பனின் கண்களும் கலங்கி இருக்கும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.

அப்படியாக ஒரு கன்னி ஸ்வாமியின் சபரி மலை யாத்திரை ஐய்யப்பனை காணாமலேயே முடிவுற்றது. 

ஆனால் ஐயப்பனுக்கோ, இது வரை வந்த சுவாமிகளை விட, வரப்போகும் சுவாமிகளை விட, மஹா தேவனை தான் மிகவும் பிடிக்கும். அவனிடம் ஜாதி, மத, ஏழை, பணக்கார, நல்ல, கெட்ட, எனது, உனது என்ற எந்த வித இருமையும் இல்லையே! பிறகு அவனை எப்படி பிடிக்காமல் போகும்.

மஹா தேவன் காத்து நின்ற இரண்டு மணி நேரமும் அந்த ஐய்யப்பன்  தன் இருப்பிடத்தில் இருந்து இறங்கி வந்து மஹா தேவனை ஆரத்தழுவி இருப்பான். அது மட்டும் நிச்சயம்.

அது உண்மையான பக்தனுக்கும், பகவானுக்கும் இடையில் மட்டுமே நடக்கும் காதல். மிகவும் பரஸ்பரமானது. மற்றவர்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை.


மஹா தேவனின் சபரி மலை யாத்திரையின் காணொளியை காண கீழே சொடுக்குக.






 மஹா தேவனின் உணர்வுகளில் மூழ்கி.............


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக