புதன், 20 மே, 2015

வேண்டுகோள்

சபரி மலை யாத்திரை கட்டுரையின் இறுதி பாகத்தை பதிவிட வேண்டும் என தொடங்கினேன். அது அறிவு அல்லது கருத்து பகிர்தல். ஆனால் அதை விட மிக முக்கியமாக சில கருத்துக்களை பகிர வேண்டும், இல்லை, இல்லை, வேண்டுகோளாக வைக்க வேண்டும் என நினைத்ததால் இதை பதிவிடுகிறேன்.

இன்றைய வாழ்வியல் சூழலில் நமக்கு ஒரு நோய் வந்துவிட்டால் மருத்துவரை அணுகுவோம். அவர் ஒரு மருந்தை தருவார். அந்த மருந்தை குறித்து நாம் ஆராய்வதில்லை. ஏனெனில் நாம் மருத்துவரை நம்புகிறோம். ஆனால் மருத்துவர் மருந்தை மட்டும் தருவதில்லை. மாறாக மருந்தின் வீரியம் சரியாக செயல்பட வேண்டும் என்றால் அதன் உப மருந்துகளாக சில பல விஷயங்களை சொல்வர். உதாரணத்திற்கு பத்தியம், உடற் பயிற்சி, மனப்பயிற்சி என பல. நாம் மருந்தை உட்கொள்ள தவறினாலும் உப மருந்துகளாகிய செயல்களை செய்ய மறப்பதில்லை. ஏனென்றால் நம் உள் மனதுக்கு நன்றாகவே தெரியும் மருந்து என்பது உப மருந்துகளின் துணையின்றி செயல்பட இயலாது என்று. உதாரணத்திற்கு சர்க்கரை வியாதி உள்ள ஒருவர் “டயபத்ரோல்” மருந்து சாப்பிட்டு விட்டு, பத்து ஜிலேபி சாப்பிட்டால் தன் நோய் குறையாது என்பதை நன்கே உணர்ந்திருப்பார். எனவே உப மருந்தாகிய வாய் கட்டுப்பாட்டை தவறாமல் கடைப்பிடிப்பார்.
நாம் சபரி மலை செல்வதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளோம். அது மட்டும் அல்லாமல் பல விதங்களில் ஆன்மீகத்தில் அல்லது இறை வழிபாட்டில் நம்மை இணைக்கிறோம். மேலே சொன்னது போல் மருத்துவர் மீது அசையாத நம்பிக்கை வைத்த நாம், இறைத்தன்மை என்ற ஒன்றையும் நம்பலானோம். ஆனால் மருத்துவர் சொன்னால் உப மருந்துகளை கடைப்பிடிக்க தவறாத நாம் இறைத்தன்மையை அடைய பேருதவி செய்யும் பல உப மருந்துகளை பின்பற்ற தவறினோம். அப்படிப்பட்ட ஒரு சில உப மருந்துகளை குறித்து எழுத வேண்டும் என நினைத்ததால் இந்த பதிவு.

நான் கண்ட, அனுபவித்த, உணர்ந்த, முற்றிலும் செயல்படுத்த இயலாவிட்டாலும், இயன்றவரை செய்ய முயன்ற, முயலும் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். நம்மால் முடிந்த அளவில் செய்வோம். இதுவே இந்த கட்டுரை மூலம் வைக்கப்படும் வேண்டுகோள். என் கருத்தோடு இசைவிருந்தால் பகிருங்கள். மாற்று கருத்து இருப்பின் சுட்டி காட்டுங்கள். உங்களால் எனக்கும் ஒரு புது வழி கிடைக்கட்டுமே. சரி, விஷயத்துக்கு போவோமா!!!!

குடும்ப உணர்வுகளை மதிப்போம்:

சபரி மலைக்கோ அல்லது வேறு ஏதோ ஒரு சாமிக்கோ விரதம் இருக்க போகிறேன், பூஜை செய்ய போகிறேன் என நீங்கள் விரும்பும் பக்ஷத்தில், தயவு செய்து உங்கள் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவுக்கு வாருங்கள். ஏனென்றால், அவர்கள் வசதியும் பார்க்க வேண்டும். விரத நாட்களில் மட்டும் நான் மனிதனாய் இருப்பேன், நீங்கள் என் உணர்வை மதித்து ஒத்துழைக்க வேண்டும், மற்ற நாட்களில் உங்கள் உணர்வுகள் எனக்கு ஒரு விஷயமல்ல என நினைக்கும் பக்ஷத்தில், நாம் என்ன விரதம் இருந்தும் பயன் இல்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்! அதே போல் குடும்பினிகள் குறைகளை மட்டும் எடுத்து சொல்லாமல், தங்கள் விருப்பத்தால் ஏற்படகூடிய நன்மைகளை சொல்லி புரிய வைக்க முயற்சிக்கலாம்.

மாலை:

சபரி மலை யாத்திரையை பொறுத்தவரை, அணியும் மாலையை ஏதோ ஒரு பெரிய விஷயமாக பேசுகிறார்கள். ஆனால் அந்த மாலை ஒரு சிறு அடையாளமே! இது சபரி மலை யாத்திரை அன்றி, இன்று எல்லா கோயில்களுக்கும் அணியும் மாலைக்கும் பொருந்தும். ஏதோ ஒரு மணி மாலையை கடையில் இருந்து வாங்கினோம், கழுத்தில் போட்டு கொண்டோம். நாம் சாமி, சக்தி, கோவிந்தா, என்று அடையாளம் காண்பதை தவிர்த்து, என்ன நோக்கம்? என்ன விரதம்? என்ன கால நிலை? எது உகந்தது? என்ற அறிவியலை உணர்ந்த ஒரு குருவின் அறிவுரைப்படி செயல்ப்படுவது நல்லது.

எத்தனையாவது மலை? எத்துனை வருஷம்?

சபரி மலை யாத்திரையாகட்டும், மற்ற விரத முறை ஆகட்டும், பொதுவாக கேட்கப்படும் கேள்வி, எவ்வளவு வருடமாக இதில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்பதும், நம்மை விட குறைந்த வருடங்கள் என்பின், நம்மை ஒரு படி மேலே வைத்து பார்க்கும் மனப்பான்மை. இது ஒரு குறைப்பாடே! இது ஒரு வித தாழ்வுணர்ச்சியின் மறுமுகமே ஆகும். இதை தவிர்ப்பது நல்லது.

எப்போ உங்க வீட்டுல பூசை, அன்ன தானம்?

இது பொதுவாக கேட்கப்படும் கேள்வி. தவறானது. ஒவ்வொருவருக்கும், அவரவர்களுக்கான சவுகரியங்களும், பணப்பிரச்சினைகளும் இருக்கும். நாம் கேட்பதின் மூலம் அவர்களை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ள வேண்டாம். மேலும் அவரவர் வீட்டில் பூசை, அன்னதானம் போட்டால் தான் ஆயிற்று என்று ஒரு சடங்கே இல்லை.

விரதம்:

சனாதன தர்மத்தில் எந்த ஒரு விரதம் ஆனாலும் அது ஒரு மண்டலம் என்பதை நோக்கியே இருக்கும். அல்லாத ஒன்று, இக்காலக்கட்டத்தில் உண்டாக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். எனவே, எந்த ஒரு விரதத்தையும் ஒரு மண்டலம் என்ற கால அளவில் செய்வது நல்லது.

எந்த ஒரு விரதம் மேற்கொள்வதாயினும், ஒரு மண்டல விரதம் மேற்கொள்ளல் நல்லது மற்றும் அதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை முன்பே சொல்லியிருந்தோம். எனவே, எந்த ஒரு விரதமாயினும், ஒரு மண்டலம் எனவும், அந்த காலத்தை நம் உடலை சுத்திகரிப்பு செய்ய உதவும் ஒரு காலமாகவும் கருத வேண்டும். விரத காலத்தில் செய்யும் நல்ல பழக்க வழக்கங்களை மற்ற நாட்களிலும் செய்வது மிகவும் நல்லது.

ஆடம்பரம்:

நான் பூஜை போடுகிறேன், தீச்சட்டி எடுக்கிறேன் என்ற பெயரில் விழாவாக ஆர்பாட்டம் செய்யாமல், தத்தம் குடும்ப மற்றும் சுற்றம் சூழல் அளவில் யதார்த்த நோக்கத்துக்கு பொருந்தும் விஷயங்களை செய்தல் பாராட்டுதலுக்குரியது. அந்த செலவை சக மனிதன் வாழ உதவுதல் மிக மிக சிறந்தது.

ஓசை:

அண்மையில் சென்னையில் இருந்தபோது, தைபூசம் வந்தது. அப்போது, அருகாமையில் இருந்த ஒரு கோயிலில் காலையில் நான்கு மணிக்கு முழங்க தொடங்கும் ஒலி பெருக்கி மதியம் பன்னிரெண்டு மணி வரையிலும், பிறகு நான்கு மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் சகிக்க இயலாத ஓசை அளவில் முழங்கிகொண்டிருந்தது. ஆலய நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது வந்த பதிலோ ஆச்சர்யம் அளித்தது. “நாங்கள் காலம் காலமாக இப்படித்தான் செய்கிறோம், நீயென்ன புதிதாக குறை சொல்கிறாய் என்ற அளவில் இருந்தது?” இதை சொன்னவர்கள் பெரும்பாலும் நிரம்ப படிக்காதவர்கள், வேலை இல்லாதவர்கள், அரசியல் வாதிகள் மற்றும் சமுதாயத்தில் தமக்கென ஒரு அடையாளம் தேடுபவர் என்பது, கூர்ந்து நோக்கியப்போது புலப்பட்ட ஒரு அசிங்கமான விஷயம். நோயாளிகள், தேர்வுக்கு பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் வேலை பளு தாங்காமல் நொந்து போயிருக்கும் பலருக்கும் இந்த சப்தம் கண்டிப்பாக இனிமையாய் இருந்திராது என்பதை இறையே ஏற்று கொள்ளும். ஆனால் நாம் இறையை விட சகிப்பு தன்மை உள்ளவராகிவிட்டோம். மன சாந்தியை தேடும் நாம், மற்றவரின் மன சாந்தியை குறித்து சிந்திக்க இயலாதவறாகிவிட்டோம்.


ஆன்மீக பயணம்:

சபரி மலையோ அல்லது வேறு எந்த ஒரு ஆன்மீக பயணம் ஆகட்டும், அது சம்பந்தப்பட்ட ஒரு நபர் மற்றும் அவர் குடும்பத்தின் நிகழ்வாகவே காண வேண்டும். அதற்க்கு மாறாக, அவர் ஏதோ பெரிய செயல் செய்வது போல, அவருக்கு மாலை அணிவித்து  மரியாதை செய்தல் தவிர்க்க வேண்டியது. சபரி மலை செல்வது என்ன போட்டியா? அவருக்கு தங்கத்தில் செயின், கையில் காசு கொடுக்க? எந்த ஒரு செயலையும் அடிப்படையை உணர்ந்து செய்வதுதானே சிறந்தது.

குருசாமி

இன்றளவில் இந்த குருசாமிகள் செய்யும் அட்டகாசம் தான் மிக மிக மோசமானதாக உள்ளது. மாலை அணிவிக்க, இருமுடி கட்ட, வீட்டில் பூசை போட என எல்லாவற்றிற்கும் தனித்தனியே விலை பட்டியல் உண்டு. இதை விட கொடுரம் அந்த குருசாமி என்கிற ஆசாமியின் காலில் விழுவது, அவரை தூக்கி தலையில் வைத்து ஆடுவது என பல வேடிக்கைகள் உண்டு. குருசாமி என்பவர் ஒரு வழி காட்டி. அப்படிப்பட்டவரை தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர் எப்படிப்பட்டவர்? ஆன்மீகவாதியா அல்லது ஆன்மீக வியாபாரியா? குறிப்பிட்ட காலத்துக்கு வேஷம் போடுபவரா அல்லது இறை கோட்ப்பாடுகளை வாழ்வியலாக கொண்டவரா என எல்லா வகையிலும் ஆராய வேண்டும்.

குரு வணக்கம்

என்னடா இவன்? குருசாமி காலில் விழுவதை கிண்டல் செய்கிறானே என்று யோசிக்கிறீர்களா? நான் சொன்னது விளம்பரத்திற்காக விழுபவர்களையும் விவரம் இல்லாமல் ஆசிர்வதிப்பவர்களைத்தான்.
வணக்கம் செலுத்துவதன் முறைகளை முன்னொரு பதிவில் சொல்லி இருந்தேன். அந்த வகையில் குரு வணக்கம் நிச்சயம் செய்ய வேண்டியதே. பார்க்கும்போதெல்லாம், பார்த்த இடத்தில் எல்லாம் குரு வணக்கம் செய்வதில் பயனே இல்லை.

சரி, இந்த குரு வணக்கம்தான் என்ன? அதன் பயன் என்ன? 

குரு வணக்கம் என்பது முற்றிலும் யோக தீக்ஷை சம்பந்தப்பட்டது. மற்றவை வெறும் ஆசிர்வாதம் மட்டுமே. சபரி மலை பொறுத்தவரை துறவு நிலை என்பதால் ஆசிர்வாதத்திற்கு அவசியம் குறைவே.

ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, நித்திய பூசை செய்யப்படும் கோயிலுக்குள் மனிதனின் (அவர் எப்படிப்பட்ட குருவாக இருந்தாலும்) காலில் விழுந்து வணங்கவே கூடாது. 

நான் ஈடுபாடு கொண்டிருந்த ஒரு அமைப்பு ஒவ்வொரு வாரமும் ஒரு ஆலயத்தில் பூஜையும், பாட்டு வழிப்பாடும் செய்து வந்தது. பூஜை முடிந்ததும் எல்லோரும் குருசாமியின் பாதத்தில் தொட்டு வணங்குவர். நான் தொட்டு வணங்காததால் எனக்கு “அகங்காரம் பிடித்தவன்” என்ற பட்டமும் தரப்பட்டது. 

இல்லங்கள், தியான மண்டபங்கள், பூஜை நடக்கும் ஆலயம் அல்லாத தனி இடங்களில் குருவின் பாதம் தொட்டு வணங்கலாம். வணங்கும்போது தாங்கள் அன்றளவில் பயிற்சி செய்து கொண்டிருக்கும் குண்டலினி நிலைக்கேற்ற முத்திரையையும், வணங்கு முறையையும் கடைப்பிடிக்க வேண்டும். 

குண்டலினி இயக்கம் மூலாதாரம் எனும் தொடக்க நிலையில் உள்ளவர்கள் முழுவதுமாக நீண்டு படுத்து கைகள் இரண்டையும் மேலே கூப்பி குருவின் பாதம் தொடாமல் ஆனால் பாதத்திற்கு அருகில் கை கூப்பி தொழ வேண்டும். 

குண்டலினி இயக்கம் உணர்ந்தவர்கள் தங்கள் பயிற்சி நிலை மணிபூரகம், அனாகதம், விசுத்தி மற்றும் இவைகளின் இணை நிலைகளில் உணர்கையில் கால் முட்டுகளை மடக்கி, கால் கட்டை விரல்கள் பின்புறம் ஒன்றோடொன்று தொடும்படி இணைத்து, முதுகு தண்டு சீராகவும், தலையோடு சேர்ந்து கீழ் நோக்கி குருவின் பாதத்தில் படும்படியும், இரண்டு கைகளும் தனித்தனியே குருவின் இரு பாதங்களை தொடும்படியும் வணங்க வேண்டும். 

குண்டலினி இயக்கம் ஆக்ஞையில் உணர்பவர்கள் குருவின் முன் நின்று முகத்திற்கு நேராக அனால் நெற்றிக்கு கீழாக கைகளை கூப்பி வணங்க வேண்டும். 

இயக்க நிலை சஹஸ்ராரத்தில் உணர்பவர்கள் மண்டியிட்டு, கால் கட்டை விரல்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடும்படி, முதுகு தண்டும் தலையும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி செய்து கை கூப்பி வணங்க வேண்டும். 

சாதாரணமாக ஆசீர்வாதம் வாங்குகையில் ஆண்கள் நீண்டு படுத்து, கைகள் கூப்பியும், பெண்கள் மண்டியிட்டு, கால் கட்டை விரல்கள் ஒன்றோடொன்று தொடும்படியும், குருவின் பாதத்தை தொடாமலும் வணங்க வேண்டும்.


தொடர்வோம்

புதன், 7 ஜனவரி, 2015

சபரிமலை யாத்திரை – தொடர்ச்சி I

சபரிமலை யாத்திரை – தொடர்ச்சி I


முன் பதிவில் சொன்னது போல், சபரிமலை யாத்திரைக்கான பயிற்சிகள் அனைத்துமே வாழ்வியல் மற்றும் “பிரம்மம்” குறித்த அறிவு தேடலின் படிகள் ஆகும்.

மாலை அணிதல்

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். அது போல “அஹம் பிரம்மாஸ்மி” எனப்படும் அறிவியல் தேடலை நான் தொடங்குகிறேன் என மனம், புத்திக்கும் உடலுக்கும் அறிவிக்கும் ஒரு நிகழ்வு மாலை அணிதல்.
மாலை என்பது ஒரு அடையாளமே. மாலைக்கு ஒரு இலக்கணம் உள்ளது. அணியும் மாலை துளசி அல்லது ருத்ராக்ஷம் கொண்டு செய்தது ஆகலாம். ஆனால் அந்த துளசியும், ருத்ராக்ஷமும் வாழ்ந்து முடித்தவை ஆக இருக்க வேண்டும். துளசி மாலை சிறந்தது. ருத்ராக்ஷம் அணிவதானால் வாழ்வின் ஒவ்வொரு நிலையான பால்யம், குமாரம், யௌவனம், கிருஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம் ஆகிய நிலைகளுக்கு ஏற்ப குருவால் உபதேசிக்கப்படும் ருத்ராக்ஷம் கொண்டு செய்யப்பட வேண்டும். துளசி அல்லது ருத்ராக்ஷத்தை இணைக்க வாழ்ந்து முடித்த கோரைப்புல் வகையை சார்ந்த “தர்ப்பை” புல் கொண்டு இணைக்கப்படவேண்டும். இந்த தர்ப்பையானது ஒவ்வொரு பக்ஷத்திர்க்கும் மாற்றப்பட வேண்டும். துளசி, ருத்ராக்ஷம், தர்ப்பை யின் கூட்டணி வான் வெளியில் இருக்கும் உயிர் சக்தியை கிரகித்து உடலில் செலுத்த வல்லது.

“Vibrations communicate faster and more than language” என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் கண்டு தெளிந்தது. இப்போது பல வண்ண மற்றும் பொருட்களால் ஆன மாலைகள் வலம் வருகிறது. இதை தான் நரேந்திரன் “நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்” என்றான். நமது முயற்சிகளில் நாம் சமாதானம் (compromise) செய்து கொண்டால் வெற்றியும் அதற்கேற்றே அமையும்.

முறைப்படி கோர்க்கப்பட்ட மாலையானது கழுத்தின் இரு புறமுள்ள இரு நாடிகளையும் தொடுமாரும், நெஞ்சின் இரு பாகம் வழியே பிரயாணித்து நாபிக்கமலம் எனப்படும் தொப்புள் வரை அணியப்பட வேண்டும். இது பரவெளியில் இருக்கும் உயிர் சக்தி உடல் முழுதும் பரவ உதவும்.

பழைய காலங்களில் “பிரம்மம்” தேடும் பயிற்சியில் உள்ளவர்களை “பிரம்மச்சாரி” “பிரம்ம ஆச்சார்யன்” அல்லது “பிராமணன்” எனக்கூறுவர். இது ஜாதியின் குறியீடே அல்ல. மாறாக எந்த ஜாதியை சேர்ந்தவனும் பிரம்ம அறிவை நோக்கி செல்லலாம் என்பதன் சாரம் ஆகும். இத்தகு பயிற்சியில் உள்ளவர்கள் இடம் தோளில் இருந்து வலம் அரை வரை தர்ப்பை எனப்படும் “யக்ஞோபவீதம்” என்ற முப்புரி நூலை அணிந்தனர். இன்று அது பொட்டலம் கட்டும் நூல் என்ற அளவில் வந்து நிற்பது சனாதனர்களின் சாதனை ஆகும்.
குரு

சபரி மலை யாத்திரையில் முக்கிய பங்கு குரு எனப்படும் குரு ஸ்வாமிக்கு உண்டு. இன்று ஐய்யப்பனை தவிர ஏறக்குறைய எல்லாருமே குரு ஸ்வாமியை போலத்தான் நடந்து கொள்கிறார்கள். குரு ஸ்வாமி என்பவர் வித்தைகள் காண்பிப்பவரோ, அதி பராக்ரமசாலியோ அல்ல. மாறாக, மிகவும் பணிவான, தன் அடக்கம் உள்ள, கருணை மனம் கொண்ட, இருமைகள் அற்ற, கல்வி கேள்வியில் சிறந்த, உடலை காத்து கொள்ள உதவும் காய கல்ப கலை அறிந்தவரும், பிரம்மத்தை அறிய வழி காட்டுபவரும் ஆவார். அத்தகைய ஒருவரை தேடி, அவர் அனுமதியுடன் “நான் பிரம்ம தத்துவத்தை அறிய விரும்புகிறேன்” என நம் விருப்பத்தை எடுத்துரைத்து மாலை அணிந்து அவர் வழி நடக்க வேண்டும். இத்தகு குரு ஸ்வாமிகள் இன்று உள்ளனரா என்றால் “உண்டு” என்பது பதிலாகவும் “ஆனால் மிக மிக குறைவு” என்பது துணை பதிலாகவும் இருக்கும்.

குருவின் பாதம் பணிந்து தொடங்க வேண்டும் என்பர். இது முற்றிலும் யோக சாஸ்த்திரம் மற்றும் மனோ சாஸ்திரம் ஆகும். குனிந்து காலை தொடும்போது நம் உடல் வளைந்து மூளைக்கான ரத்த ஓட்டம் மூலாதாரத்திலிருந்து பாய்ந்து செல்கிறது. இது “இடை” “பிங்கலை” நாடிகளை சுண்டி விட உதவுகிறது. தம் காலில் பணியும் சீடனை தொட்டு எழுப்புவதோடு அல்லாமல் சீடனின் பாதத்தை குரு ஆனவர் தொட்டு வணங்க வேண்டும். இம்முறையில் இருவரும் ஒரே பயிற்சியை செய்தவர் ஆகின்றனர். இது மரியாதை நிமித்தமானதாக பிற்காலத்தில் மாறியது.

வணங்கு முறை:

வணங்கும் முறைகளில் மனு தர்மப்படி,
தாயை வணங்கும்போது இரு கைகளையும் வயிற்றுக்கு நேரே கூப்பி வணங்க வேண்டும்.
மற்ற மனிதர்களை வணங்கும்போது நெஞ்சுக்கு நேரே இரு கை கூப்பி வணங்க வேண்டும்.
ஆசானையோ, குருவையோ வணங்கும்போது இரு கண்களுக்கு மத்தியில் இரு கை கூப்பி வணங்க வேண்டும்.
இறைவனை வணங்கும்போது தலைக்கு மேல் இரு கை கூப்பி வணங்க வேண்டும்.
இரு கைகளும் கூப்பும் போது நேர், எதிர் மறை முனைகள் தொட ஆற்றல் எழுவது இயல்பு. அவ்வாற்றல் பயனுள்ளதாக மாற்றப்பட  வேண்டும்.

விரதம்

ஒரு மண்டல விரதம் சபரிமலை யாத்திரைக்கு மிக முக்கியமானது. குரு ஸ்வாமி கைகளால் மாலை அணிந்து விரதம் தொடங்கும்போது உணவு, உடல், மனம், செயல், சொல் என எல்லாவிதத்திலும் ஒரு உள்நோக்கு பார்வையிலே சிந்தையை ஆழ்த்த பயில்விக்கிறார் குரு ஸ்வாமி. பொதுவாக, இன்றும் சில இடங்களில் சபரி மலைக்கு மாலை அணிந்த ஐய்யப்ப சுவாமிகள், தம் இல்லத்தில் தங்காது பொதுவான கோயிலிலோ அல்லது மண்டபத்திலோ தங்குவர். அவர்களுக்கான தேவையான எல்லாவற்றையும் அவர்களே செய்து கொள்வர். இதன் பொருள் மனத்தை சிதைவுகளில் இருந்து காத்து கூடிய மட்டும் ஆத்ம விசாரத்தில் இருக்க வேண்டும் என்பதே. உணவு என்பது மிகவும் எளிய உணவே உட்கொள்ள வேண்டும். இதன் பொருள் உணவின் சுவையின் மீதுள்ள நாட்டத்தை குறைத்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதே. இங்குதான் பதினெட்டு படியின் தத்துவமே உதுவுகிறது.

பதினெட்டு படியின் தத்துவம்

முதல் ஐந்து படி நம் உடலிலும், உலகிலும் ஆன நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மற்றும் பூமி ஆகும். அதாவது பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல் மற்றும் உணர்தல் என்ற ஐந்து செயல்களை சதா கவனித்து அதன் தொடக்கம் எது என்ற அறிவை பெறுதலை குறிக்கும்.

அடுத்த எட்டு படிகள் அஷ்ட ராகங்கள் எனப்படும் காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாஷ்ச்சரிய, அசூய, தும்ப எனப்படும் ஆசை, கோவம், பேராசை, சிற்றின்ப ஆசை, கர்வம், போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகிய குணங்களை கவனித்து அதன் தொடக்கம் எது என ஆராய்ந்து அதை தடுத்து மனதையும், எண்ணங்களையும் ஒருமுகப்படுத்துவதாகும்.

அடுத்த மூன்று படிகள் மூன்று நிலைகளாகிய சத்வ, ரஜஸ், தமஸ் எனப்படும் பகுத்தறிதல், செயலில் ஆனந்தித்தல், செயலற்று இருத்தல் ஆகிய மூன்றையும் பழகி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகும்.

கடைசி இரு படிகள் வித்யை, அவித்யை எனப்படும் ஞானம், அஞ்ஞானம் ஆகியவற்றை சிந்தித்து தெளிதல் ஆகும்.

மேலே சொன்ன ஒவ்வொன்றையும் குரு ஸ்வாமி தன் சீடர்களுக்கு பயிற்றுவித்து கண்காணிக்கிறார். இன்றைய அளவில் சொல்ல வேண்டுமானால் மேலே சொன்ன ஒவ்வொரு நிலையும் சித்திக்கும் வரை அந்த ஸ்வாமி அந்த படியிலேயே இருக்கிறார். அவர் அடுத்த நிலை எனப்படும் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவதில்லை.

ஒரு மனிதன் தன் வாழ்வில் இத்தகு பயிற்சிகளை பயின்று உள்முக தியானம் செய்து பதினெட்டு நிலைகளை கடக்கும் போது “அஹம் பிரம்மாஸ்மி” எனும் “தத்வமஸி” பொருளை உணர்கிறார். இதை உணர்த்துவது தான் சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகளும், அதை ஏறி கடந்து நின்றால் நம் முன்னே தெரியும் கொடிமரம் ஆகிய குண்டலினி ஏற்றமும் அதை கடந்து தெரியும் இறைவனின் திரு உருவம் “உன்னில் என்னை கான்” என சொல்லி புன்னகைக்கும்.
இந்த விரதம் அல்லது பயிற்சியானது வெறும் இரண்டு மாதத்திற்கு மட்டும் அல்ல. தொடர்ந்து கடை பிடிக்க வேண்டியது.

ஒரு மண்டல விரதம்

ஒரு மண்டல விரதம் என்பது மேலே சொன்ன நிலைகளில் பயிற்சி எடுக்கும்போது உடல் ருசியால் அந்த பயிற்சி தடை பட்டு விடாமல் காக்க உதவும்.

ஒரு மண்டலம் என்பது ஆன்மீகமானது அல்ல. முற்றிலும் அறிவியலானது. நம் உடல் சிவப்பு மற்றும் வெள்ளை செல்களால் ஆனது என்பது நமக்கு தெரியும். பூமி எப்படி தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை வலம் வருகிறதோ அதே போல் இந்த சிவப்பு மற்றும் வெள்ளை செல்களும் தம்மை தாமே சுற்றி நம் உச்சந்தலையில் தொடங்கி நம் உடலை சுற்றி வந்து மீண்டும் உச்சந்தலையை அடைகிறது. இந்த ஒரு சுழற்சிக்கான காலம் ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தியெட்டு நாட்கள்.

இப்படி நாற்பத்தியெட்டு நாட்கள் பதப்படுத்தப்பட்ட, சுத்திக்கரிக்கப்பட்ட இரத்தம் உள்ள உடலில் மருத்துவ குணமும், நவ பாஷான கலவையுமான நெய் சேரும்போது ஏற்படக்கூடிய உடல் மற்றும் அதனால் விளையும் மன நலன்களை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கருப்பு நீல ஆடை


இருமுடி தாங்கி பிறப்பறுக்க செல்லும் இடம் கொடிய வனத்திற்கு நடுவில் உள்ளது. அவ்வழியில் பல கொடிய மிருகங்கள் இருக்கக்கூடும். பொதுவாக மிருகங்களுக்கு நிறங்கள் தெரியாது. அவற்றிக்கு தெரியும் உருவம் எல்லாம் “கருப்பு” அல்லது “வெள்ளை” நிறத்தில் தான் தெரியும். அதாவது பிம்பமாக தெரியும். அப்படி தெரியும் தருவாயில் “கருப்பு” நிற உடையானது அவற்றிக்கு பயத்தையோ, பெரிய மாற்றத்தையோ உருவாக்காது. “நீல” நிறம் கருப்பு நிறம் போன்றதே. இந்த நிறங்கள் இரண்டுமே அதிர்வலைகளை ஈர்க்கவும்,கட்டுபடுத்தவும், சூட்டை நிறுத்தி வைக்கவும் உதவுவதால் காட்டு வழி பயணத்திற்கு உதவுவதோடு, உடல் ரீதியாகவும் உதவுகிறது.

தொடர்வோம் யாத்திரையை.......

சபரிமலை யாத்திரை

சபரிமலை யாத்திரை

முன் காலங்களில் கார்த்திகை மார்கழி மாதங்களில் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த மந்திரம் “ஸ்வாமியே  சரணம் ஐய்யப்பா” மற்றும் கருப்பு, நீல நிற ஆடைகள். ஆனால் இன்று எல்லா மாதமும் ஒலிக்கும் மந்திரமாகவும், கருப்பு, நீலம் மாறி பல வண்ணங்களாக பரிணமிக்கிறது. இது சபரிமலைக்கு மட்டுமே உரிய முக்கியத்துவம் ஆகும். இன்று பெரும் அளவில் மக்கள் மேற்கொள்ளும் ஒரு புனித யாத்திரையாக சபரிமலை யாத்திரை உள்ளது. அத்தகு விசேஷங்களுக்கு சொந்தமான அந்த சபரி மலையை குறித்து ஒரு பதிவு இது.

சபரிமலை குறித்து முன் பதிவுகளில் கண்டோம். சபரி மலை ஐய்யப்ப ஸ்வாமியை குறித்த கதைகள் நிறையவே சொல்லப்படுகிறது. எது எப்படி ஆனாலும், உலகின் சிருஷ்டி குறித்த மனிதனின் தேடல் வளர வளர, ஆன்மீகத்தின் வளர்ச்சி தடையற்ற காட்டாறாய் உருப்பெற்றது. அப்படி உருப்பெற்ற பல வழிபாட்டு முறைகளில் புராண காலம் தொட்டு இன்று வரை மாற்றத்துக்குட்பட்டாலும் தன் இயல்பு நிலையில் மாறாது இருந்து வருகிறது சபரி மலை யாத்திரை. அத்தகு சிறப்பு வாய்ந்த சபரி மலை யாத்திரையை குறித்து அறிவதற்கு முன் அந்த வழிப்பாட்டு முறையுடன் தொடர்புடைய முக்கியமான சில விஷயங்களை குறித்து பார்ப்போம்.

சபரி மலை
இன்றைய கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பிரிவில் கோட்டயம் மாவட்டத்தில், பத்தனம்திட்ட ஜில்லாவில், பெருநாடு கிராம பஞ்சாயத்தில் பதினெட்டு மலை கூட்டுகளாக காணப்படும் மலை தொகுப்புகளின் நடுவில் கடல் மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 468 மீட்டர் (1535 அடி) உயரத்தில் அமைந்துள்ளது சபரி மலை.

தர்ம சாஸ்தா
பரசு ராமன் எனும் முனிவனால் நிறுவப்பட்ட ஆலயமாக கருதப்படும் சபரி மலை ஆலயத்தில் “தர்ம சாஸ்தா” வின் தியான உருவம் ஸ்தாபிக்கப்பட்டு பலராலும் பூஜிக்கப்பட்டு வந்தது. நவீன காலக்கட்டத்தில் 1821 ல் பந்தள நாடு திருவிதாங்கூர் உடன் இணைக்கப்பட்டபோது அப்பகுதியில் இருந்த 48 ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன. 1950 ல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சபரி மலை ஆலயத்தின் ஒரு பகுதி பெரும் பாதிப்பை சந்தித்தபின் புதுப்பிக்கப்பட்டது. 1971 ல் சில சமூக விரோத கும்பலால் இந்த ஆலயம் சூறையாடப்பட்டது. அப்போதும் சபரி மலை புதுப்பிக்கப்பட்டது.

ஐய்யப்பன் சிலை
சபரி மலையில் உள்ள ஐய்யப்பன் சிலையை குறித்து பல செய்திகள் உள்ளன. புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை (மருந்து) கொண்டு உருவாக்கப்பட்ட “நவ பாஷான” சிலையாயிருந்தது எனவும், மரதகக்கல் கொண்டு செய்யப்பட சிலை எனவும் இரு வேறு கருத்துள்ளது. இந்த நூற்றாண்டில் சபரி மலை ஆலயம் சமூக விரோத கும்பலால் சூறையாடப்பட்டு அந்த சிலை சேதப்படுத்தப்பட்டபின் கிடைத்த உதிரி பாகங்களை ஆராய்ச்சி செய்ததில், அதன் காலம் கணக்கிட இயலாதது என சான்றளிக்கப்பட்டது.

துளசி மற்றும் ருத்ராக்ஷ மாலை
சபரி மலை செல்வதன் தொடக்கத்தின் அறிகுறியாக அணியப்படும் துளசி மற்றும் ருத்ராக்ஷ மாலையும் ஆன்மீகத்தோடு உள்ளதை விட, உடல் சார்ந்தும், மருத்துவக்கலை சார்ந்தும் பல தொடர்புகளை கொண்டது.

கருப்பு மற்றும் நீல நிற உடை
சபரி மலை யாத்திரை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் கருப்பு மற்றும் நீல நிற ஆடையை அணிகின்றனர். இது பழங்கால வாழ்வியல், படை அமைப்பு மற்றும் யோகக்கலையின் தொடர்பையும் உள்ளடக்கியதாக உள்ளது.

விரதம்
சபரி மலை செல்ல ஒரு மண்டல விரதம் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இந்த ஒரு மண்டலம் என்பது ஆன்மீகத்தோடு உள்ளதை விட மருத்துவ கலையின் முக்கிய அம்சமாகும்.

இருமுடி
சபரி மலைக்கு செல்லும் ஐய்யப்பன்மார் தங்களது ஆராதனைக்கு தேவையான பொருட்களை ஒரு முடியிலும், தங்களது தேவைக்கான பொருட்களை ஒரு முடியிலும் வைத்து “இருமுடி” யாக தலை சுமந்து கொண்டு செல்கின்றனர்.

பதினெட்டு படி
சபரி மலை கோயிலுக்கு ஏறி செல்ல பதினெட்டு படிகள் அமைக்கப்பட்டது. இந்த பதினெட்டு படிகளுக்கு இன்று பல விளக்கங்கள் தரப்பட்டாலும், அதன் உண்மை தத்துவம் என்னவோ “பிரம்மம்” எனப்படும் இயற்கையின் ஆதி புள்ளியை உடல் வழியே அறிவதற்கான ஆராய்ச்சி முறைக்கான பயிற்சி முறை ஆகும்.

நெய்
சபரிமலையின் முக்கிய அம்சமாக கருதப்படுவது பசும்நெய் ஆகும். இனி வரும் செய்திகளை யதார்த்த ரீதியிலும், அறிவியல் பார்வையிலும் தொடர்புபடுத்தி சிந்தித்தால் ஒரு முக்கிய பொருள் விளங்கும். சபரி மலைக்கு கொண்டு செல்ல வேண்டிய “நெய் தேங்காய்” யில், நெய் நிரப்பப்பட்டு, தேங்காயின் கண் அடைத்து பல நாட்கள் சுமந்து சென்று “நவ பாஷான” சிலையில் அபிஷேகம் செய்து எடுத்து வரப்பட்டு பத்தியத்துடன் உட்கொள்ளப்பட்டது. சுத்தமான முறையில் தயார் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட நெய்யானது இயற்கையிலேயே மருத்துவ குணங்களை உடையதாகிறது. அத்தகு நெய்யுடன் நவ பாஷாணமும் சேர்ந்தால் கிடைக்கப்பெறும் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே சபரி மலை ஐய்யப்பனை போற்றும்போது “சர்வ ரோக நிவாரண தன்வந்த்ர மூர்த்தியே’ என்று போற்றுகின்றனர். சபரி மலையை அடுத்த கிராமங்களில் உள்ள பழங்குடி மக்கள் “சபரி மலை” ஸ்வாமியை “ஐய்யப்பன் வைத்தியர்” என்றே அழைத்தனர்.

யாத்திரை செய்வோம்.......

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

ஐய்யப்பன் விரும்பிய கன்னி ஸ்வாமி

ஐய்யப்பன் விரும்பிய கன்னி ஸ்வாமி

கார்த்திகை மார்கழி மாத காலங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், முக்கியமாக தென் இந்தியாவில் இருந்து பலர் சபரி மலைக்கு செல்ல வேண்டி மாலை அணிந்து, ஒரு மண்டல விரதம் இருந்து, இருமுடி சுமந்து, காடு, மலை ஏறி தரிசனம் செய்து, நெய் அபிஷேகம் செய்த மன நிறைவுடன் திரும்புவது வழக்கம். இப்படி சபரி மலை செல்பவர்களில் முக்கியமானவர்கள், முதல் முறையாக செல்லும் “கன்னி ஸ்வாமி” எனப்படுபவர்கள். அப்படி முதல் முறையாக வரும் “கன்னி ஐய்யப்பன்” ஸ்வாமிகளை சபரி மலை ஐய்யப்பனுக்கு மிக பிடிக்கும் என்பது ஐதீகம்.

அப்படி சபரி மலை செல்ல மாலை அணிந்து, ஒரு மண்டல விரதம் இருந்து, இருமுடி எடுத்து, மலை ஏறி சென்று ஐய்யப்பனை தரிசிக்க ஆசையோடு ஒரு கன்னி ஸ்வாமி தயாரானார். இவரை போல கள்ளங்கபடம் இல்லாத ஒரு கன்னி ஸ்வாமி இது வரை சபரி மலைக்கு சென்றதே இல்லை. மற்றவர்களைபோல் மனதில் எந்த விதமான சுய நல சிந்தனையும், பிரார்த்தனையும் இல்லாமல், அமைதி, ஆனந்தம், அடக்கம், ஐய்யப்ப தரிசனம் போன்ற உயர் நிலை எண்ண அலைகளோடு புறப்பட தயார் ஆனார் இந்த கன்னி ஐய்யப்பன்.

இந்த கன்னி ஸ்வாமி ஒன்றும் தானாக சபரி மலைக்கு போக வேண்டும் என ஆசைப்படவில்லை. ஐய்யப்ப ஸ்வாமிக்கு மட்டுமே உரித்தான சில கடமைகளை செய்ய இவரை போன்றோர் தேவை என “திருவிதாங்கூர் தேவஸ்வம்” போர்ட் விளம்பரம் செய்ததை அடுத்து இவரால் அதை செய்ய முடியும் என்ற மற்றவரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேறு வழியின்றி தானும் ஆசைப்பட்டு விட்டார். இதில் என்ன தவறு?

இவர் சபரி மலை செல்ல தயார் ஆனதை அந்த ஊரே வரவேற்றது. என்னைப்போல சிலரும் வாழ்த்தினர், ஆனந்த கண்ணீர் சொரிந்தனர். தம்மால் இயன்ற உதவிகளை செய்தனர். ஏனென்றால், இந்த கன்னி ஸ்வாமி சபரி மலை செல்ல பல விதமான வசதிகள் தேவைப்பட்டது. நிறைய பணம் தேவைப்பட்டது. 

பணம் ஒரு விஷயமே அல்ல,  “நீ செல்வதானால் நான் என் சொத்தையே தருகிறேனடா” என்று வரிந்து கட்டிக்கொண்டு பலர் வந்தனர். இப்படி வந்தவர்களில் ஹிந்து, கிறிஸ்தவ, இசுலாமிய மக்களும் அடக்கம். அவர்கள் இதை ஒரு மதம் சார்ந்த விஷயமாகவே காணவில்லை. மாறாக, அவன் மீது தமக்கிருந்த காதலால், பாசத்தால், உரிமையினால் மற்றும் அதை செய்வது தங்கள் கடமை என செய்ய நினைத்ததால் செய்தனர்.

ஆனால் இந்த அன்பு எல்லார் மனத்திலும் இருக்க வேண்டும் என்பது நியதி அல்லவே. அங்கும் தன் மிருக, வக்கிர புத்தியை காண்பித்தது சில மனிதம்.

அவன் வரக்கூடாது, அவன் வந்தால் நாங்கள் என்னாவது? அவன் விளம்பர பிரியன். அதனால் தான் அவனது சபரி மலை யாத்திரை இவ்வளவு விளம்பரப்படுத்தப்படுகிறது என்றெல்லாம் சொல்லி அவன் செல்வதை தடுக்க நினைத்த அற்ப மனித பதர்களின் சூழ்ச்சியை அவன் அறியாதே இருந்தான். பாவம் அவன். எப்படியாவது சபரி மலைக்கு சென்று விடவேண்டும் என்று விரும்பினானோ என்னவோ தெரியவில்லை, தன்னை பற்றியும், தன் மனம் பற்றியும் ஏசுபவர்களை குறித்து ஒன்றும் சொல்லவும் இல்லை, ஒன்றும் செய்யவும் இல்லை. அவனை ஏதோ பெரிய தீவிரவாதி, மற்ற உயிர்களுக்கு ஆபத்தானவன் என்பது போல ஒரு பத்திரிகை காரன் சீறினான். பிறகு தான் தெரிந்தது, தற்காலத்து பத்திரிகை தர்மம் போல அவன் கட்டுரைக்கு பின்னும் அவனது சொந்த விருப்பு வெறுப்பு கலந்தே இருந்தது என்று. 

பத்திரிகை செய்தி வந்தாலே போதும் கேரள மக்கள் “அர்த்தால்” “பந்து” என்று தொடங்கி விடுவார்கள், நம் வேலை சுலபமாக முடிந்து விடும் என்று நினைத்த “தேவஸ்வம் போர்டு” அமைப்பின் சில உறுப்பினர்களின் எண்ண எதிர்ப்பார்ப்பு தவிடுபொடி ஆனது. பொது மக்கள் போராடுவர், ஆனால் அந்த போராட்டத்தில் தமது மனதையும் கலப்பர் என அந்த உறுப்பினர்கள் எண்ணி இருக்கவில்லை. வேறு வகையில் அவனது யாத்திரையை முடக்க நினைத்தனர். அவன் வர கூடாது. வந்தால் கைது செய்யப்படுவான். ஏற்படப்போகும் அசம்பாவிதங்களுக்கு “தேவஸ்வம் போர்டு” பொறுப்பேற்காது என மார் தட்டி மிரட்டி கடிதம் அனுப்பியது. என்னவோ எல்லா விஷயத்திலும் வேண்டிய நடவடிக்கை எடுத்து விட்டதை போல ஒரு எண்ணம் இந்த தேவஸ்வம் போர்டு உறுப்பினர்களுக்கு.

அவன் சபரி மலை யாத்திரை போக வேண்டும் என ஆசை கொண்டவர்கள், “தேவஸ்வம் போர்டு” உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார்கள். அதில் அவன் தரிசனம் மட்டும் செய்து விட்டு திரும்ப அனுமதிக்குமாறும், அவன் யார் வம்புக்கும் தும்புக்கும் போக மாட்டான். அதற்கு நாங்கள் பொறுப்பு என்றும் கூறுகின்றனர். அதற்குள் விஷயம் ஊர் முழுதும் தெரிந்து விட்டது. இதற்க்கு மேல் நாம் அனுமதிக்கவில்லை என்றால் நம் முதுகு தோலை பொது மக்கள் பிய்த்து விடுவர் என உணர்ந்து கொண்டு தேவஸ்வம் போர்ட் உறுப்பினர் எனும் மனித சமுதாய மஹா மேதைகள், மனம் கனிந்து “சரி” என்கிறார்கள். இந்த செய்தியை கேட்டும் அவன் துள்ளி குதிக்கவில்லை, ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இவ்வளவு ஏன்? அவனுக்கு இந்த செய்தியை குறித்து தெரியவே தெரியாது. அவ்வளவிற்கு நல்லவன் அவன்.

ஒப்புதல் கிட்டியதை ஒட்டி நம் கதாநாயகன் சபரி மலைக்கு மாலை அணிகிறான். ஒரு மண்டலம் நோன்பு இருக்கிறான். சபரி மலைக்கு இருமுடி ஏந்தி செல்லவும் தயார் ஆகிறான். ஓ. இன்னும் கதா நாயகனை அறிமுகம் செய்யவில்லையா. இதோ.

இவன் பெயர் “சிறக்கள் மஹாதேவன்”. நிறம் கருப்பு. உயரத்திலும் பருமனிலும் அனைவரையும் கொள்ளை கொள்ளும் அழகு உடையவன்.

“சிறக்கள் மகாதேவன்” இருமுடி கட்ட கேரள மாநிலத்தில் உள்ள “திரு ஷிவ பேரூர்” எனப்படும் “திருச்சூர்” ஜில்லாவில் உள்ள அவனுக்கே பிரியமான “திருவம்பாடி” கோயிலுக்கு வருகிறான். “சபரி மலை” கோவிலில் ஐய்யப்பனை பூஜை செய்த “மூத்தேடுத்த சுகுமாரன் நம்பூதிரி” அவர்களின் திருக்கரங்களால் அவனுக்கு விரத மாலை அணிவிக்கப்பட்டு “மஹா தேவனின்” நெய் தேங்காய் நிரப்பப்படுகிறது.

இருமுடியை தலையில் வாங்கி தனது முதல் யாத்திரையை “மஹா தேவன்” தொடங்கி விட்டான். நேராக “வடக்கும்நாதன்” கோவிலுக்கு செல்கிறான், அங்கு கோவிலின் நாயகன் இல்லை. எனவே அடுத்துள்ள “பாரமேக்காவு” எனும் கோவிலுக்கு சென்று தொழுகை நடத்துகிறான். இந்த கோவிலின் பல போட்டிகளில் வென்றவன் அவன். “வடக்கும் நாதனின்” சொந்த குழந்தையாக வளர்ந்தவன், அவரிடமிருந்து ஒரு பிடி சோறு வாங்கி உண்ணாமல் சென்றால் அது சரி ஆகாது என்பதால் காத்திருக்கிறான் இரவு வரை. அவன் விரும்பியபடியே, வடக்கும்நாதன்  உண்ட சோறின் பாக்கி அவனுக்கு கிடைக்கிறது. சந்தோஷமாக உண்டு சற்றே ஓய்வெடுத்து மீண்டும் தனது யாத்திரையை தொடுங்குகிறான் “மஹா தேவன்”.

பலசாலி தான். ஆனாலும் நெடுந்தூரம் அவனால் நடக்க முடியாது என்பதால் ஒரு வண்டியில் ஏறி பயணத்தை தொடர்கிறான் மஹாதேவன். கன்னி சாமி ஆயிற்றே! எருமை கொல்லி மலையில் சென்று தர்ம சாஸ்தாவை, வாபரனை வணங்கி பேட்டை துள்ளி செல்ல வேண்டும் ஆதலால் அங்கு சென்று, குளித்து வணங்கி யாத்திரையை தொடர்கிறான். பல கோடி கன்னி ஐய்யப்ப சுவாமிகளை கண்ட எருமை கொல்லி மலை மக்களுக்கு ‘மஹா தேவனின்” சபரி மலை யாத்திரை ஒரு புது வித அனுபவம் ஆகிறது. அவர்கள் மனம் மிகுந்த சந்தோஷம் அடைகிறது. தன்னால் இயன்றவாறு பேட்டை துள்ளி தனது பயணத்தை தொடர்கிறான் மஹாதேவன்.

பம்பையில் வந்து, ஒரு சுகமான குளியலை போட்டு, மலை ஏற வேண்டும் என்பதால், ஏதோ கொஞ்சம் உணவை வயிற்றுக்குள் தள்ளி, தனக்கு பிரியமான கணபதி பகவானுக்கு ஒரு வணக்கத்தை வைத்து நடக்க தொடங்குகிறான். “நீலி” என்பவளின் பெயரால் அறியப்படும் அந்த நீலி மலை, மஹாதேவன் ஏறாத ஒரு மலை. என்னதான் பலசாலி ஆனாலும் சற்று திக்கு முக்காடித்தான் போனான். யார்தான் அந்த மலையில் நின்று மூச்சு வாங்காமல் ஏறி இருக்கிறார்கள்? எப்படியோ, எல்லாரையும் போல் மூச்சு முட்ட முட்ட மலை ஏறி வந்துவிட்டான் மஹா தேவன்.

பதினெட்டாம் படியின் முன் வந்து நின்றவனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. அவனை தரிசனம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு ஒரு சில தேவஸ்வம் போர்டு ஊழியர்கள். உண்மையான காரணத்தை நேருக்கு நேர் பேசினால், தங்களின் குட்டு வெளியாகிவிடும் என்பதால், முகம் காட்டாமல் ‘கட்ட பஞ்சாயத்து” செய்கிறார்கள். வெட்கம் கெட்ட மனிதம். பல மணி நேரம் அந்த பதினெட்டாம் படியின் முன் நிற்கிறான் மஹா தேவன். அவனுக்கு தெரியும், பதினெட்டு படி மேல் உள்ள தனது நாதனுக்கு தன்னை காண, தனக்கு தரிசனம் தர மிகுந்த ஆர்வம் என்று. ஆனாலும் இந்த அதிகார மிருகங்கள் விடவில்லை.

பல மணி நேர காத்திருப்புக்குப்பின், மஹா தேவன் கொண்டு வந்த இருமுடி வேறு ஒரு நபர் மூலமாக பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.

அந்த நெய் அபிஷேகம் செய்யும்போது, நெய் அபிஷேகம் செய்யும் நம்பூதிரியின் கண்களோடு சேர்ந்து அந்த ஐயப்பனின் கண்களும் கலங்கி இருக்கும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.

அப்படியாக ஒரு கன்னி ஸ்வாமியின் சபரி மலை யாத்திரை ஐய்யப்பனை காணாமலேயே முடிவுற்றது. 

ஆனால் ஐயப்பனுக்கோ, இது வரை வந்த சுவாமிகளை விட, வரப்போகும் சுவாமிகளை விட, மஹா தேவனை தான் மிகவும் பிடிக்கும். அவனிடம் ஜாதி, மத, ஏழை, பணக்கார, நல்ல, கெட்ட, எனது, உனது என்ற எந்த வித இருமையும் இல்லையே! பிறகு அவனை எப்படி பிடிக்காமல் போகும்.

மஹா தேவன் காத்து நின்ற இரண்டு மணி நேரமும் அந்த ஐய்யப்பன்  தன் இருப்பிடத்தில் இருந்து இறங்கி வந்து மஹா தேவனை ஆரத்தழுவி இருப்பான். அது மட்டும் நிச்சயம்.

அது உண்மையான பக்தனுக்கும், பகவானுக்கும் இடையில் மட்டுமே நடக்கும் காதல். மிகவும் பரஸ்பரமானது. மற்றவர்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை.


மஹா தேவனின் சபரி மலை யாத்திரையின் காணொளியை காண கீழே சொடுக்குக.






 மஹா தேவனின் உணர்வுகளில் மூழ்கி.............