புதன், 24 டிசம்பர், 2014

ஐய்யப்பன் விளக்கு பூஜை – இறுதி பாகம்

ஐய்யப்பன் விளக்கு பூஜை




மணிகண்டன் எதிரிகளை அழிக்க, புலிப்பால் எடுக்க, பிறப்பறுக்க என்ற மூன்று இலட்சியங்களுடன் சபரி வனம் செல்ல தீர்மானித்து, யுத்த வியூகங்கள் வகுத்து அவை வெற்றி பெற “தர்ம சாஸ்தாவை” தியானித்து “சாஸ்தா விளக்கு” பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன் நினைவாகவே “சாஸ்தா விளக்கு” இன்று “ஐய்யப்பன் விளக்கு” என்று அனுஷ்டிக்கப்படுகிறது.

சற்று நிகழ்கால வழக்கோடு விளங்கி கொள்ள முயலுவோம். குரு ஸ்வாமி (மணிகண்டன்) தன் சீடர்களாகிய ஐய்யப்ப பக்தர்களுடன் (படை வீரர்கள்) பிறப்பறுத்தல் நோக்குடன் சபரி மலைக்கு செல்ல தொடங்கும் யாத்திரைக்கான பிரார்த்தனை இந்த சாஸ்தா விளக்கு. மணிகண்டனுக்கு மூன்று நோக்கங்கள் இருந்தது ஆனால் இன்று அந்த முதல் இரண்டு நோக்கங்கள் நமக்கு அவசியம் ஆகவில்லை. எனவே மூன்றாம் நோக்கமாகிய “பிறப்பறுத்தல்” பிரதானமான லட்சியமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த பூஜை மணிகண்டன் செய்த போது எப்படி செய்திருக்க கூடும் என்பதை நம் உள்ளுணர்வால் உணரும் வகையிலும் அதே பூஜை இன்றளவில் எப்படி செய்யப்படுகிறது என்பதையும் ஒரு சேர அறிவோம்.

சாஸ்தா விளக்கு

சாஸ்தா விளக்கின் முக்கிய தர்மம் “காலை முதல் காலை வரை” என்பதே. “உதயம் முதல் உதயம் வரை”.

சாஸ்தா விளக்கு பூஜைக்கு முக்கியமானவர், இந்த பூஜையை நடத்தி தரவேண்டிய “மாபதி” எனப்படும் குருநாதர் ஆகிய ஆசான். மணிகண்டன் இந்த பூஜையை செய்ய எண்ணி தம்  களரி ஆசானை மரியாதை செய்து அழைக்கிறார். ஆசான்,  மணிகண்டன் அழைப்பை ஏற்று பூஜை செய்ய வேண்டிய முறையையும், அதற்கு தேவையான பொருட்கள் குறித்தும், அதன் தொடர்பான விரத முறைகளை  போதிக்கிறார். இன்று நடக்கும் பூஜைகளை செய்ய பல குழுக்கள் உள்ளது. அதற்கு ஆசான் உள்ளார். அவரை அணுகி நம் விருப்பத்தையும் இடம், நாள், நேரம் சொல்லி அவர் ஒப்புதல் பெற்று அவரிடம் இருந்து தேவையான பொருட்கள் பற்றிய விவரங்களை குரு ஸ்வாமியோ அல்லது பெரிய ஸ்வாமியோ பெறுகிறார்கள்.

பூஜையின் முன் நாள் இரவு கலை வித்தகன் ஆன “மாபதி” எனும் ஆசான் மற்றும் அவரது சீடர்கள் மணிகண்டன் மற்றும் அவனது படை நடத்த போகும் போருக்காக விசேஷமாக செய்யப்பட ஆயுதங்களையும், உபகரணங்களையும், போர் வெற்றி பெற தாம் பூஜித்து ஆராதிக்கும் “தர்ம சாஸ்தா” வின் உருவத்தையும், சாஸ்தா விளக்கு பூஜை நடக்கும் இடத்திற்கு கொண்டு வருகிறார். மணிகண்டன், தன் படை, உற்றார், உறவினர் எல்லோரும் ஒரு சேர மரியாதையும் பக்தியும் சேர்ந்து “மாபதி” அவர்களின் பாதங்களை கழுவி வரவேற்று மரியாதை செய்கின்றான். இந்த நிகழ்வு “மாபதி வரவேல்ப்பு” என்று அழைக்கப்படுகிறது. மாபதி எனப்படும் ஆசான் மணிகண்டனின் களரியில் வந்து மறுநாள் காலை தொடங்க வேண்டிய பூஜைக்கான ஏற்பாடுகளை செய்கிறார்.











பூஜை நடக்க வேண்டிய பந்தலுக்கு, முதல் கால் நடுவதும் மற்றும் பந்தலுக்கு உள்ளே செய்யப்போகிற அம்பல வடிவங்களுக்கு வரைபடம் வைக்கவும் செய்கிறார் ஆசான். இந்த நிகழ்வு “களம் ஒருக்கள்” அல்லது “பத்மமிடல்” என கூறப்படுகிறது. களம் ஒருக்கள் நிகழ்ச்சியின் முக்கிய வடிவாக பந்தலின் முதல் கால் மற்றும் அம்பலம் உண்டாக்க வேண்டிய வாழை மரத்தூண் இரண்டையும் மணிகண்டன் கையால் ஊன்றப்படுகிறது. இந்த நிகழ்வின் போது விளக்கு ஏற்றப்பட்டு, நுனி வாழை இலையில் நெல், தேங்காய், தானிய விதைகள், துளசி இதழ்கள் வைத்து ஆசானுக்கு காணிக்கையாக ஒரு தங்க காசு வைக்கப்படுகிறது. இன்று ஒப்பந்த தொகையாக  நிர்ணயிக்கப்படுவதால் 11,21,51,101 ரூபாய் என அவரவர் வசதிக்கு ஏற்ப “குரு தக்ஷிணை” என்ற பெயரில் தரப்படுகிறது. பந்தல் எழுப்பப்பட்டு கூரை வேயப்படுகிறது. பந்தலானது சதுர அல்லது செவ்வக வடிவில் அமைக்கப்படுகிறது. பொது பூஜை, பிரார்த்தனை என்பதால், அவசியம் முடிந்து அகற்றக்கூடியதும், அந்த கால சம்பிரதாயமும், தம் சிற்ப கலையை வெளிப்படுத்த ஏதுவாக வாழை மர பட்டை, தென்னங்கீற்று, மூங்கில் குச்சிகள் மற்றும் வாழை தண்டுகள் கொண்டு அம்பல வடிவங்களை உருவாக்குகிறார்கள். விடிவதற்குள் அம்பலம் தயாராகி விட்டது.

இன்றைய கால கட்டத்தில் இந்த அம்பல வடிவங்கள் மாற்றம் அடைந்துள்ளன. அம்பலம்  செய்யும் முறையில் ஒவ்வொரு களரி ஆசானும் தன் சிற்ப கலையின் சிறப்பை வெளிக்கொணர முயற்சிப்பார். பிற்காலத்தில் சாஸ்தா விளக்கு பூஜையானது   கால், அரை, முக்கால், முழு விளக்கு என வகைப்படுத்தப்பட்டது. வகைக்கேற்ப அம்பலங்களின் எண்ணிக்கை 1,3,5,7 என கூடியது. சாஸ்தாவை பூஜித்த ஐயப்பனை மனிதர்கள் பூஜிக்க தொடங்கியபோது, ஐயப்பனுக்கும், அவனது பரிவாரங்களுக்கும் அம்பலங்கள் எழுந்தன. ஆனால் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

ஐயப்பனுக்கு (சாஸ்தா) மட்டும் அம்பலமும், பரிவாரங்களுக்கு பீடமும் வைத்து செய்யப்படும் பூஜை “கால் விளக்கு” என்றும், ஐயப்பன் (சாஸ்தா), தேவி, வாபரன் ஆகிய மூவருக்கும் அம்பலம் அமைத்து செய்யப்படும் பூஜை ‘அரை விளக்கு” என்றும், ஐயப்பன் (சாஸ்தா), தேவி, வாபரன், வலியகடுத்த (பெருஞ்சிருத்தை) என அறியப்படும் கரிமலை முண்டன் ஆகிய கரிமல மற்றும் கொச்சு கடுத்த (சிருஞ்சிருத்தை) ஆகியோருக்கு அம்பலமும் வைத்து செய்யப்படும் பூஜை “முக்கால் விளக்கு” என்றும், மேற்சொன்ன ஐந்து அம்பலங்களுடன் கணபதி (விநாயகன்), சுப்ரமண்யன் (முருகன்) ஆகியோருக்கு அம்பலமும், சுற்று சுவரும் எழுப்பி செய்யப்படும் பூஜை “முழு விளக்கு” என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. செய்யும் விளக்கு பூஜையின் அளவிற்கேற்ப பீடங்களின் எண்ணிக்கை 9,11,13 என வேறுபடுகிறது. இதை ஆசான் நிர்ணயிக்கிறார். அம்பலம் பூர்த்தி செய்யப்பட்டு, கலை வேலைப்பாடுகள் நிரம்ப சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு ஜொலிக்க வைக்கப்படுகிறது. இங்கு ஆசான் மற்றும் அவரது சீடர்களின் சிற்ப திறமையும் அலங்கார கலை திறமையும் வெளிப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட அம்பலம் மணிகண்டனிடம் பூஜைக்காக ஏற்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு “ஏட்டு (ஏற்று) வாங்கல்” எனப்படுகிறது.


சாஸ்தா விளக்கு அனுஷ்டிக்கப்படும் தினம் பிரம்ம யாமத்தில் களரி ஆசான், சீடர்கள், மணிகண்டன், படை வீரர்கள் அனைவரும் குளத்தில் குளித்து பூஜைக்கு தயாராகின்றனர். களரி ஆசான் ஆசீர்வாதத்துடன் மணிகண்டன் மற்றும் படை, தங்கள் திட்டம் நிறைவேற குல தெய்வத்தையும், தடைகள் அகல விநாயகனையும் வணங்குகின்றனர். இன்றளவும் சாஸ்தா விளக்கின் ஆரம்பம் இப்படித்தான் உள்ளது.

(ஒரு யாமம் என்பது மூன்று மணி நேரம் ஆக கணக்கில் கொள்ளப்பட்டது)

முதல் யாமம்

பிரம்ம மூகூர்த்த வேலையில் “தர்ம சாஸ்தாவை” “குடியிருத்தி பூஜா” என்ற ஆசாரப்படி மனதில் தியானித்து வாழை மர அம்பலத்துக்குள் இருக்கை தந்து அமர செய்கிறார் ஆசான். “தர்ம சாஸ்தா” வை குடியிருத்தும்போது, கூடவே அவரது ஆயுதங்கள் சேர்த்து அவரது பரிவாரங்களையும் குடியிருத்துகிறார். இந்த நேரத்தில் தொடங்கி “சாஸ்தா விளக்கு” முடியும் வரை ‘உடுக்கு பாட்டு” எனப்படும் “சாஸ்தாம் பாட்டு” அந்தந்த நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு இசைக்கப்படுகிறது.

இரண்டாம் யாமம்

சாஸ்தாவை குடியிருத்தி, உப தேவதைகளையும் பீடத்தில் இருத்தி, எல்லாவரும் சுற்றி வந்து வணக்கம் சொல்லி, பூஜை, உச்ச பூஜை, உச்சப்பாட்டு போன்ற நிகழ்வுகள் நடக்கும். குடியிருத்தல் முடிந்ததும் உயிரிகள், விலங்குகள் தொல்லை வராதிருக்க மூலிகை சேர்ந்த நீர், பூஜை நடக்கும் இடத்தை சுற்றி தெளிக்கப்படுகிறது. ஒவ்வொரு அம்பலத்திலும் அந்தந்த அம்பலங்களுக்கு உரிய தேவ, தேவதைகளை வணங்கி, போற்றி, தாங்கள் செய்யும் பூஜையின் நோக்கம் என்னவென்றும் அதை நிறைவேற்றி தர வேண்டியும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இங்கு முக்கிய தெய்வமான “தர்ம சாஸ்தா” வின் பெயர் மற்றும் புகழை 1008  அல்லது 100008 என்ற கணக்கில் உருவிட்டு தியானிக்கிறான் மணிகண்டன் அவனது படை வீரர்களுடன். இந்த நிகழ்வு இன்றளவும் “லக்ஷார்ச்சனை” என்ற பெயரில் மணிகண்டனாகிய குரு சுவாமியும், படை வீரர்களாகிய ஐய்யப்பன்மார் ஒரு சேர நடக்கிறது. அறிவியல் பார்வையில் யோகாசனத்தில் அமர்ந்து ஒரு செயலை நினைத்து மனதை ஒரு நிலைப்படுத்தும் focusing process  ஆக இந்நிகழ்வு அமைகிறது. நம் உடலின் உள் வாய் பகுதியில் உள்ள “மனோன்மனிய சுரப்பியை” தொடர்ந்து இசைப்பதன் மூலம் சிறந்த மூச்சு பயிற்சி நடைபெறுவதோடு ‘குண்டலினி” சக்தி எழுப்பப்படுவதற்கான கூறுகள் அதிகம் என யோக சாஸ்திரம் மற்றும் அகத்தியனின் மருத்தவ புத்தகமும் தெரிவிக்கிறது. இன்று நடைபெறும் பூஜைகளில் புரோகிதரோ, பெரிய ஸ்வாமியோ  “சஹஸ்ர நாம” அர்ச்சனை சொல்லுகையில் ஐய்யப்பன்மார் “ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா” என்று சொல்கையில் அவர்களது அடி மற்றும் நுனி நாக்கு வாயின் உள்பகுதியில் அமைந்த “மனோன்மனிய சுரப்பி” யை தொடர்ந்து இசைப்பதை ஒரு அறிவியல் நோக்கில் காணாமல் இருக்க இயலாது. இந்த பூஜைகள் முடிந்ததும் மணிகண்டனும், படையும், அவர்களுக்கு துணை நின்ற சுற்றம் சூழல் அனைவருக்கும் உணவளிக்கப்படுகிறது.


மூன்றாம் யாமம்

உணவுக்கு பின் எல்லாவரும் குளித்து “பாலக்கொம்பு எழுன்னல்லிப்பு” எனப்படும் ஒரு நிகழ்வு நடத்தப்படுகிறது. இதன் தொடக்கமாக பந்தலில் இருந்து சங்க நாதம் முழங்கி, அது கேட்கும் தூரத்திற்குள் இருந்து “எழிலம்பால” எனும் மரத்திலிருந்து கிளை வெட்டி எடுத்து வரப்படவேண்டும். இதில் ஆசானும், பூஜை செய்யும் எல்லோரும் சாஸ்தாம் பாட்டு சகிதம், அருகில் உள்ள “எழிலம்பால மரம்” என்கிற மரத்தின் அடியில் சென்று பூஜை செய்து, அந்த மரத்தில் இருந்து ஆசான் சொல்லும் கிளை வெட்டப்பட்டு, தரை தொடாமல் கையில் ஏந்தி கொண்டு வரப்படுகிறது. இதை சுமந்து வரும் பொறுப்பு மணிகண்டனின் படையில் புதிதாக உள்ள வீரர்கள் கையில் ஒப்படைக்கப்படுகிறது. இந்த பால மரம், சாஸ்தாவின் உருவமாக கருதப்படுகிறது. அதனால், இதனை கொண்டு வரும் வழியெல்லாம் “மங்கைமார்” எனப்படும் கன்னிகைகள் கையில் “தாளம்” என்னும் விளக்கேந்தி வரவேற்று கொண்டு செல்கின்றனர்.

“எழிலம்பால” மரத்திற்கு “எக்ஷி பால”, “தெய்வ பால” “சப்த பர்னா” (ஏழு இலைகள் ஒன்றாக உள்ளதால்) என பல பெயர்கள் உண்டு. “தேரவட புத்திசம்” என்ற பத்தியில், “முதலாம் புத்தன்” இந்த பால மரத்தை தனக்கு ஞானம் பெற போதி மரமாய் உபயோகித்துள்ளான்  என அறிந்து கொள்ள முடிகிறது. இம்மரத்திற்கு மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல விசேஷங்கள் சொல்லப்படுகிறது.












இந்த பூஜையில் பால மரம் பூஜிக்கப்பட்டு அதன், பால், இலை, பூ ஆகியன கொண்டு ஒரு வித மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து அரவம் விஷம் முதல் வயிற்று உபாதை போன்ற பல நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. “சாஸ்தா” வின் உருவமாக கருதப்படும் பால மரம் எடுத்து வரப்படும்போது மணிகண்டனின் படை வீரர்கள் ஆவேச கோஷம் இட, படை தளபதிகள் தங்கள் ஆயுதங்களுடன், நடனமாடியபடி புடை சூழ வருகின்றனர். இந்த பால மரத்துக்கு வெளிச்சமாக விளக்கும், தீபமும், சங்க நாதமும் துணை வருகிறது.

நான்காம் யாமம்

பால மரம் பந்தலை அடைகையில், ஆசான் மற்றும் சீடர்கள் உடுக்கை வாத்தியம் இசைத்து தளபதிகள் நடனத்துடன் வரும் “தர்ம சாஸ்த்தா” வை “எதிறேல்ப்பு” எனும் தாளத்தில் ஆட வைத்து ரசித்து பந்தலுக்குள் சகல மரியாதைகளுடன் கொண்டு செல்கின்றனர். விவசாய மக்களின் மூலமான நெல், விதைகள் “பர” எனப்படும் “குருனியில்” நிறைக்கப்பட்டு, பாக்கு மரத்தின் பூக்கள் அதன் மேல் வைக்கப்படுகிறது. இது ஒரு மங்கள நிகழ்வின் அடையாளமாக காணப்படுகிறது. இதன் பொருள் அந்த ஆண்டு அல்லது போக விளைச்சலில் உணவு தானியங்கள் முதல் வருமான தானியங்கள் வரை எல்லாவற்றிற்கும் சிறந்த விளைச்சல் தந்தமைக்கு நன்றி என்றும் மேலும் சிறக்க வேண்டியும் ஆகும். இந்த செயலுக்கு மற்றொரு மாண்பும் அடங்கியுள்ளது. விளக்கு பூஜையை நடத்தி தரும் ஆசான் மற்றும் அவரது சீடர்களின் வாழ்வாதாரத்திற்கான நெல், விதை போன்றவை இந்த பூஜை நடத்துபவரால் தரப்படுகிறது. பாலக்கொம்பு சாஸ்தா ஆலயத்தில் வைக்கப்பட்டு தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது நடனம் ஆடி வந்த படை தளபதிகள் அரசனுக்கும், மற்றவர்க்கும் தம் போர் திறமைகளை செய்து காட்டுகின்றனர். அப்போது செண்டை முதற்கொண்ட வாத்தியங்கள் முழங்குகின்றன. வாத்தியத்திற்கு ஏற்ப ஆடி தமது போர்க்கலைகளை வெளிப்படுத்துவது தனி அழகாகும்.  மஹா பாரத யுத்தம் முதல் கொண்டு கலிங்கத்து போர் வரை, யுத்த காலத்தில் வாத்திய கோஷங்கள் இருந்தது என்பது எல்லாவரும் அறிந்ததே. இதன் மூலம், வாத்தியங்களுக்கும், போருக்கும், போர் முறைக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருந்து வந்ததை உணர முடிகிறது.







ஐந்தாம் யாமம்

பந்தலை வந்தடைந்த பால மரம், ஆயுதங்கள், சாஸ்தா, உப தேவைதைகள் என எல்லாவருக்கும் “அத்தாழ பூஜை” எனப்படும் “உணவூட்டு” நடைபெறுகிறது. பிறகு படையணியின் வாத்திய மற்றும் கலைஞர்கள் தங்கள் கலைகளை வெகு ஈடுபாட்டோடு வெளிப்படுத்துகின்றனர். இதை அவர்கள் இறைவனுக்காய் மட்டும் செய்கின்றனர். ஏனென்றால் செல்லும் போரில் வீர மரணம் அடைந்தால், தங்கள் மனதுக்கு நெருக்கமான தலைவனாகிய இறை தன்மைக்காய், இனியொரு முறை செய்ய இயலாமல் போய் விடுமோ என்ற ஐயத்தினால். மேலும் பல கலைகள்  அறிந்த குருக்கள் இந்த வேலையில் இறைவனை அல்லது இறை தன்மையை  குறித்து பாட்டாலும், தம் பேச்சாலும் படை வீரர்களுக்கு உபதேசிக்கின்றனர்.

ஆறாம் யாமம்

வாத்திய கோஷங்கள், பாடல்கள் மற்றும் உபதேச, உபன்யாசம் முடிந்ததும், “சாஸ்தாம் பாட்டு” என்ற உடுக்கு அடித்து பாடும் நிகழ்ச்சி தொடங்குகிறது. “மாபதி” ஆகிய ஆசான் மற்றும் அவரது சீடர்கள் குழு, “கைலாச பர்வம்” தொடங்கி, “ஐய்யப்பன் ஜனனம்”, “அம்ருத பூஜை” வரை பாடி எல்லாவருக்கும், “தர்ம சாஸ்தா” வின் அவதாரம் குறித்தும் ஐய்யப்பன் சரித்திரம் குறித்தும் பாடி விளக்குகின்றனர். இந்த பாடல்கள் கிராமிய கலையின் எடுத்துக்காட்டாகும். அவர்கள் ஒவ்வொரு கதையையும், அதில் வரும் கதா பாத்திரங்களையும் வருணிப்பது மிகவும் அழகானது.

சரித்திர பாட்டுகள் முடிந்ததும் “மாபதி” யின் குழுவில் ஒருவர் தன் தலையில் “தட்டு” மற்றும் “கிண்டி” என்கிற ஜல பாத்திரத்தை தலையில் வைத்து கொண்டு அமர்ந்திருக்கிறார். ஆசான் தொடங்கி அவரின் மூத்த சீடர்கள் “காணி பாட்டு” “பொளிப்பாட்டு” என்ற பாடலில் நகைச்சுவையாக பல விஷயங்களை சொல்லி கொடுப்பர். முக்கியமாக செல்லும் வழியில் உள்ள மலைகள், அதன் சிறப்பு, எச்சரிக்கை நடவடிக்கை போன்ற விஷயங்களோடு, நையாண்டியும் சேர்த்து பாடுகின்றனர். பாடலை கேட்டு ரசிக்கும் அன்பர்கள் தாம் விரும்பும் காணிக்கையை அந்த தட்டிலும், கிண்டி எனும் பாத்திரத்திலும் சேர்க்கின்றனர். இந்த காணிக்கைகள் ஆசான் மற்றும் குழுவினரின் திறமைக்கு கிடைத்த பரிசாய் மாறுகிறது.


ஏழாம் யாமம்

உடுக்கு பாட்டு முடிந்ததும், மணிகண்டனும், படையும் புலிப்பால் எடுக்க புறப்பட தயாராகின்றனர். அதற்கு தேவையான  கிண்டி எனும் ஜல பாத்திரம் மற்றும் இதர சாதனங்களுடன் ஆசான், தேவி பூஜை நடத்தி படை தளபதிகளை தயார் படுத்துகிறார். ஆசானின் சீடர்கள் உடுக்கடித்து பாட்டு பாடி தேவியின் புகழையும், துணை வர வேண்டுதலையும் வைக்கின்றனர். தேவிக்கான பூஜை வடக்கு பாகத்தில் நடத்தப்படுகிறது.

எட்டாம் யாமம்

எட்டாம் யாமத்தில், திரி உழிச்ச்சல், கனல் சாட்டம் எனும் கலை நிகழ்வை நிகழ்த்தி காட்டுகின்றனர் படை வீரர்கள். இது அவர்களின் பயிற்சியின் உச்சத்தை காட்சிப்படுத்துகிறது. இதன் பிறகு, வேட்ட விளி எனும் பயிற்சி, பாடல் மூலம் பாடி உணர்த்தப்படுகிறது. இந்த நேரம் வடக்கு வாயிலில் பூஜை செய்யப்படுகிறது.

வேட்ட விளி முடிந்தவுடன், வாபரன் என்ற மாபெரும் வீரனை வெல்ல வேண்டி அதற்கான போர் தந்திர ஒத்திகை நடைபெறுகிறது. பின்னாளில் இந்த நிகழ்வு “ஐய்யப்பன்” “வாவர்” வெட்டும் தடவும் என்ற பெயரில் நடத்தப்படுகிறது.



இறுதியாக, சாஸ்தா மற்றும் பரிவாரங்களை அம்பலத்தில் இருந்து வெளியே எழுந்தருள செய்து ‘குருதி அர்ப்பணம்” எனும் குங்கும கலவை தயாரித்து அர்ப்பணம் செய்யப்படுகிறது. இதன் பொருள் தர்மத்தை நிலை நாட்ட என் குருதியையும் அர்ப்பணம் செய்ய துணிகிறேன் என ஒவ்வொரு படை வீரனும், மறவர்களும் மனதார வாக்கு தருகின்றனர். பிற்காலத்தில் இது, பலியிடுதல் என மாற்றுரு பெற்றது. ஆனால் இது தவறான வழி காட்டுதல் ஆகும். செய்த பூஜையில் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டி “மாப்பு” எனும் நிகழ்வின் மூலமாக மன்றாடப்படுகிறது. இறை தன்மையிடம் விடை பெற்று ‘சாஸ்தா விளக்கு” நிறைவு பெற்று மணிகண்டனும், படையும் தங்கள் இலட்சியத்திற்கான பயணத்தை தொடர்கிறார்கள். அவர்கள் பயணம் தொடங்க சுற்றம், சுழல் எல்லாம் இனி இவரை காண்போமா என நினைந்து கண்ணீர் மல்க பிரார்த்தனையுடன் வழி அனுப்புகின்றனர்.

இத்துடன் "சாஸ்தா விளக்கு பூஜை" இனிதே நிறைவுறுகிறது.

பயணம் புறப்பட்ட மணிகண்டனும் படையும், எருமையை கொன்று “அலசா” (அழுதா) நதிக்கரையில் அடக்கம் செய்து, வாபரனை வீழ்த்தி, உதயணனை வென்று, காட்டு வழி கடந்து “அம்பா” (இன்றைய பம்பா) நதிக்கரையை அடைந்து, தாம் இது வரை போரின் காரணமாக கொன்ற பலரின் ஆன்மாவின் சாந்திக்கு வேண்டி தர்ப்பணம் செய்து பிறகு உணவருந்தி சாஸ்தாவை “கால் விளக்கு” எனும் முறையில் “அம்பா” நதிக்கரையில் நினைந்து, தியானம் செய்து பாடல், நடனம் மூலம் உள் முக தியானம் செய்து தீபங்கள் ஏற்றி ‘அம்பா” நதியை வழிபட்டு பயணிக்கின்றனர். பயணத்தில் சபரியின் தியான பலம் உணர்ந்து, தமது ஆயுதங்களை தியாகம் செய்து, நிஷ்களங்க மனதுடன் தர்ம சாஸ்தாவை பொன்னம்பல மேடு என்னும் இடத்தில் தரிசனம் செய்து திரும்புகின்றனர்.





புலிப்பாலுடன் திரும்பிய மணிகண்டன், தன் கடமைகளை நிறைவேற்றி தன் மன ஆசையை தனது தந்தையிடம் சொல்கிறான். ஆணைப்படி, சபரிமலையில் மணிகண்டன் தியானத்தில் அமர அவன் சொன்ன விதிப்படி ஆலயம் அமைக்கப்படுகிறது. ஒரு முடியில் சாஸ்தா பூஜைக்கான பொருளும், மற்றொரு முடியில் தனக்கான பொருட்களுடன் முன்பு புறப்பட்டது போல், மணிகண்டன் மீண்டும் புறப்பட்டு, தன் ஆலயத்தில் சாஸ்தாவை பூஜித்து “அபய சின் முத்திரையுடன் கூடிய த்யானபிந்து ஆசனம்”, “யோகபர்ண முத்திரையுடன் கூடிய கிரஹ நாரிய ஆசனம்”, “அபான பாந்த முத்திரையுடன் கூடிய குத பாத ஸ்ரேஷ்டாசனம்” மற்றும் “பத்ராசன முத்திரையுடன் கூடிய அஷ்டகோண சாஸ்தாசனம்” ஆகிய நிலையில் யோக நிஷ்டையில் ஆழ்ந்து தன் ஆன்மாவை “சாஸ்தா” வில் லயிக்க செய்து பிறப்பருக்கிறான்.





















சபரிமலை, விரதம், மலை யாத்திரை, சபரி மலை கோயில் ஆகியவை எப்படி அறிவியல் பூர்வமானவை என்பதை வேறொரு பதிவில் பார்ப்போம். அது வரை, சாஸ்தா விளக்கு எங்கு நடந்தாலும் “தர்மத்தை” நான் கடைப்பிடிப்பேன், நிலை நாட்டுவேன் என மனதார உறுதி எடுத்து அந்த பூஜை சிறப்புற நம்மால் ஆன பங்களிப்பை தருவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக