புதன், 24 டிசம்பர், 2014

ஐய்யப்பன் விளக்கு பூஜை – இறுதி பாகம்

ஐய்யப்பன் விளக்கு பூஜை




மணிகண்டன் எதிரிகளை அழிக்க, புலிப்பால் எடுக்க, பிறப்பறுக்க என்ற மூன்று இலட்சியங்களுடன் சபரி வனம் செல்ல தீர்மானித்து, யுத்த வியூகங்கள் வகுத்து அவை வெற்றி பெற “தர்ம சாஸ்தாவை” தியானித்து “சாஸ்தா விளக்கு” பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன் நினைவாகவே “சாஸ்தா விளக்கு” இன்று “ஐய்யப்பன் விளக்கு” என்று அனுஷ்டிக்கப்படுகிறது.

சற்று நிகழ்கால வழக்கோடு விளங்கி கொள்ள முயலுவோம். குரு ஸ்வாமி (மணிகண்டன்) தன் சீடர்களாகிய ஐய்யப்ப பக்தர்களுடன் (படை வீரர்கள்) பிறப்பறுத்தல் நோக்குடன் சபரி மலைக்கு செல்ல தொடங்கும் யாத்திரைக்கான பிரார்த்தனை இந்த சாஸ்தா விளக்கு. மணிகண்டனுக்கு மூன்று நோக்கங்கள் இருந்தது ஆனால் இன்று அந்த முதல் இரண்டு நோக்கங்கள் நமக்கு அவசியம் ஆகவில்லை. எனவே மூன்றாம் நோக்கமாகிய “பிறப்பறுத்தல்” பிரதானமான லட்சியமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த பூஜை மணிகண்டன் செய்த போது எப்படி செய்திருக்க கூடும் என்பதை நம் உள்ளுணர்வால் உணரும் வகையிலும் அதே பூஜை இன்றளவில் எப்படி செய்யப்படுகிறது என்பதையும் ஒரு சேர அறிவோம்.

சாஸ்தா விளக்கு

சாஸ்தா விளக்கின் முக்கிய தர்மம் “காலை முதல் காலை வரை” என்பதே. “உதயம் முதல் உதயம் வரை”.

சாஸ்தா விளக்கு பூஜைக்கு முக்கியமானவர், இந்த பூஜையை நடத்தி தரவேண்டிய “மாபதி” எனப்படும் குருநாதர் ஆகிய ஆசான். மணிகண்டன் இந்த பூஜையை செய்ய எண்ணி தம்  களரி ஆசானை மரியாதை செய்து அழைக்கிறார். ஆசான்,  மணிகண்டன் அழைப்பை ஏற்று பூஜை செய்ய வேண்டிய முறையையும், அதற்கு தேவையான பொருட்கள் குறித்தும், அதன் தொடர்பான விரத முறைகளை  போதிக்கிறார். இன்று நடக்கும் பூஜைகளை செய்ய பல குழுக்கள் உள்ளது. அதற்கு ஆசான் உள்ளார். அவரை அணுகி நம் விருப்பத்தையும் இடம், நாள், நேரம் சொல்லி அவர் ஒப்புதல் பெற்று அவரிடம் இருந்து தேவையான பொருட்கள் பற்றிய விவரங்களை குரு ஸ்வாமியோ அல்லது பெரிய ஸ்வாமியோ பெறுகிறார்கள்.

பூஜையின் முன் நாள் இரவு கலை வித்தகன் ஆன “மாபதி” எனும் ஆசான் மற்றும் அவரது சீடர்கள் மணிகண்டன் மற்றும் அவனது படை நடத்த போகும் போருக்காக விசேஷமாக செய்யப்பட ஆயுதங்களையும், உபகரணங்களையும், போர் வெற்றி பெற தாம் பூஜித்து ஆராதிக்கும் “தர்ம சாஸ்தா” வின் உருவத்தையும், சாஸ்தா விளக்கு பூஜை நடக்கும் இடத்திற்கு கொண்டு வருகிறார். மணிகண்டன், தன் படை, உற்றார், உறவினர் எல்லோரும் ஒரு சேர மரியாதையும் பக்தியும் சேர்ந்து “மாபதி” அவர்களின் பாதங்களை கழுவி வரவேற்று மரியாதை செய்கின்றான். இந்த நிகழ்வு “மாபதி வரவேல்ப்பு” என்று அழைக்கப்படுகிறது. மாபதி எனப்படும் ஆசான் மணிகண்டனின் களரியில் வந்து மறுநாள் காலை தொடங்க வேண்டிய பூஜைக்கான ஏற்பாடுகளை செய்கிறார்.











பூஜை நடக்க வேண்டிய பந்தலுக்கு, முதல் கால் நடுவதும் மற்றும் பந்தலுக்கு உள்ளே செய்யப்போகிற அம்பல வடிவங்களுக்கு வரைபடம் வைக்கவும் செய்கிறார் ஆசான். இந்த நிகழ்வு “களம் ஒருக்கள்” அல்லது “பத்மமிடல்” என கூறப்படுகிறது. களம் ஒருக்கள் நிகழ்ச்சியின் முக்கிய வடிவாக பந்தலின் முதல் கால் மற்றும் அம்பலம் உண்டாக்க வேண்டிய வாழை மரத்தூண் இரண்டையும் மணிகண்டன் கையால் ஊன்றப்படுகிறது. இந்த நிகழ்வின் போது விளக்கு ஏற்றப்பட்டு, நுனி வாழை இலையில் நெல், தேங்காய், தானிய விதைகள், துளசி இதழ்கள் வைத்து ஆசானுக்கு காணிக்கையாக ஒரு தங்க காசு வைக்கப்படுகிறது. இன்று ஒப்பந்த தொகையாக  நிர்ணயிக்கப்படுவதால் 11,21,51,101 ரூபாய் என அவரவர் வசதிக்கு ஏற்ப “குரு தக்ஷிணை” என்ற பெயரில் தரப்படுகிறது. பந்தல் எழுப்பப்பட்டு கூரை வேயப்படுகிறது. பந்தலானது சதுர அல்லது செவ்வக வடிவில் அமைக்கப்படுகிறது. பொது பூஜை, பிரார்த்தனை என்பதால், அவசியம் முடிந்து அகற்றக்கூடியதும், அந்த கால சம்பிரதாயமும், தம் சிற்ப கலையை வெளிப்படுத்த ஏதுவாக வாழை மர பட்டை, தென்னங்கீற்று, மூங்கில் குச்சிகள் மற்றும் வாழை தண்டுகள் கொண்டு அம்பல வடிவங்களை உருவாக்குகிறார்கள். விடிவதற்குள் அம்பலம் தயாராகி விட்டது.

இன்றைய கால கட்டத்தில் இந்த அம்பல வடிவங்கள் மாற்றம் அடைந்துள்ளன. அம்பலம்  செய்யும் முறையில் ஒவ்வொரு களரி ஆசானும் தன் சிற்ப கலையின் சிறப்பை வெளிக்கொணர முயற்சிப்பார். பிற்காலத்தில் சாஸ்தா விளக்கு பூஜையானது   கால், அரை, முக்கால், முழு விளக்கு என வகைப்படுத்தப்பட்டது. வகைக்கேற்ப அம்பலங்களின் எண்ணிக்கை 1,3,5,7 என கூடியது. சாஸ்தாவை பூஜித்த ஐயப்பனை மனிதர்கள் பூஜிக்க தொடங்கியபோது, ஐயப்பனுக்கும், அவனது பரிவாரங்களுக்கும் அம்பலங்கள் எழுந்தன. ஆனால் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

ஐயப்பனுக்கு (சாஸ்தா) மட்டும் அம்பலமும், பரிவாரங்களுக்கு பீடமும் வைத்து செய்யப்படும் பூஜை “கால் விளக்கு” என்றும், ஐயப்பன் (சாஸ்தா), தேவி, வாபரன் ஆகிய மூவருக்கும் அம்பலம் அமைத்து செய்யப்படும் பூஜை ‘அரை விளக்கு” என்றும், ஐயப்பன் (சாஸ்தா), தேவி, வாபரன், வலியகடுத்த (பெருஞ்சிருத்தை) என அறியப்படும் கரிமலை முண்டன் ஆகிய கரிமல மற்றும் கொச்சு கடுத்த (சிருஞ்சிருத்தை) ஆகியோருக்கு அம்பலமும் வைத்து செய்யப்படும் பூஜை “முக்கால் விளக்கு” என்றும், மேற்சொன்ன ஐந்து அம்பலங்களுடன் கணபதி (விநாயகன்), சுப்ரமண்யன் (முருகன்) ஆகியோருக்கு அம்பலமும், சுற்று சுவரும் எழுப்பி செய்யப்படும் பூஜை “முழு விளக்கு” என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. செய்யும் விளக்கு பூஜையின் அளவிற்கேற்ப பீடங்களின் எண்ணிக்கை 9,11,13 என வேறுபடுகிறது. இதை ஆசான் நிர்ணயிக்கிறார். அம்பலம் பூர்த்தி செய்யப்பட்டு, கலை வேலைப்பாடுகள் நிரம்ப சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு ஜொலிக்க வைக்கப்படுகிறது. இங்கு ஆசான் மற்றும் அவரது சீடர்களின் சிற்ப திறமையும் அலங்கார கலை திறமையும் வெளிப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட அம்பலம் மணிகண்டனிடம் பூஜைக்காக ஏற்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு “ஏட்டு (ஏற்று) வாங்கல்” எனப்படுகிறது.


சாஸ்தா விளக்கு அனுஷ்டிக்கப்படும் தினம் பிரம்ம யாமத்தில் களரி ஆசான், சீடர்கள், மணிகண்டன், படை வீரர்கள் அனைவரும் குளத்தில் குளித்து பூஜைக்கு தயாராகின்றனர். களரி ஆசான் ஆசீர்வாதத்துடன் மணிகண்டன் மற்றும் படை, தங்கள் திட்டம் நிறைவேற குல தெய்வத்தையும், தடைகள் அகல விநாயகனையும் வணங்குகின்றனர். இன்றளவும் சாஸ்தா விளக்கின் ஆரம்பம் இப்படித்தான் உள்ளது.

(ஒரு யாமம் என்பது மூன்று மணி நேரம் ஆக கணக்கில் கொள்ளப்பட்டது)

முதல் யாமம்

பிரம்ம மூகூர்த்த வேலையில் “தர்ம சாஸ்தாவை” “குடியிருத்தி பூஜா” என்ற ஆசாரப்படி மனதில் தியானித்து வாழை மர அம்பலத்துக்குள் இருக்கை தந்து அமர செய்கிறார் ஆசான். “தர்ம சாஸ்தா” வை குடியிருத்தும்போது, கூடவே அவரது ஆயுதங்கள் சேர்த்து அவரது பரிவாரங்களையும் குடியிருத்துகிறார். இந்த நேரத்தில் தொடங்கி “சாஸ்தா விளக்கு” முடியும் வரை ‘உடுக்கு பாட்டு” எனப்படும் “சாஸ்தாம் பாட்டு” அந்தந்த நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு இசைக்கப்படுகிறது.

இரண்டாம் யாமம்

சாஸ்தாவை குடியிருத்தி, உப தேவதைகளையும் பீடத்தில் இருத்தி, எல்லாவரும் சுற்றி வந்து வணக்கம் சொல்லி, பூஜை, உச்ச பூஜை, உச்சப்பாட்டு போன்ற நிகழ்வுகள் நடக்கும். குடியிருத்தல் முடிந்ததும் உயிரிகள், விலங்குகள் தொல்லை வராதிருக்க மூலிகை சேர்ந்த நீர், பூஜை நடக்கும் இடத்தை சுற்றி தெளிக்கப்படுகிறது. ஒவ்வொரு அம்பலத்திலும் அந்தந்த அம்பலங்களுக்கு உரிய தேவ, தேவதைகளை வணங்கி, போற்றி, தாங்கள் செய்யும் பூஜையின் நோக்கம் என்னவென்றும் அதை நிறைவேற்றி தர வேண்டியும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இங்கு முக்கிய தெய்வமான “தர்ம சாஸ்தா” வின் பெயர் மற்றும் புகழை 1008  அல்லது 100008 என்ற கணக்கில் உருவிட்டு தியானிக்கிறான் மணிகண்டன் அவனது படை வீரர்களுடன். இந்த நிகழ்வு இன்றளவும் “லக்ஷார்ச்சனை” என்ற பெயரில் மணிகண்டனாகிய குரு சுவாமியும், படை வீரர்களாகிய ஐய்யப்பன்மார் ஒரு சேர நடக்கிறது. அறிவியல் பார்வையில் யோகாசனத்தில் அமர்ந்து ஒரு செயலை நினைத்து மனதை ஒரு நிலைப்படுத்தும் focusing process  ஆக இந்நிகழ்வு அமைகிறது. நம் உடலின் உள் வாய் பகுதியில் உள்ள “மனோன்மனிய சுரப்பியை” தொடர்ந்து இசைப்பதன் மூலம் சிறந்த மூச்சு பயிற்சி நடைபெறுவதோடு ‘குண்டலினி” சக்தி எழுப்பப்படுவதற்கான கூறுகள் அதிகம் என யோக சாஸ்திரம் மற்றும் அகத்தியனின் மருத்தவ புத்தகமும் தெரிவிக்கிறது. இன்று நடைபெறும் பூஜைகளில் புரோகிதரோ, பெரிய ஸ்வாமியோ  “சஹஸ்ர நாம” அர்ச்சனை சொல்லுகையில் ஐய்யப்பன்மார் “ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா” என்று சொல்கையில் அவர்களது அடி மற்றும் நுனி நாக்கு வாயின் உள்பகுதியில் அமைந்த “மனோன்மனிய சுரப்பி” யை தொடர்ந்து இசைப்பதை ஒரு அறிவியல் நோக்கில் காணாமல் இருக்க இயலாது. இந்த பூஜைகள் முடிந்ததும் மணிகண்டனும், படையும், அவர்களுக்கு துணை நின்ற சுற்றம் சூழல் அனைவருக்கும் உணவளிக்கப்படுகிறது.


மூன்றாம் யாமம்

உணவுக்கு பின் எல்லாவரும் குளித்து “பாலக்கொம்பு எழுன்னல்லிப்பு” எனப்படும் ஒரு நிகழ்வு நடத்தப்படுகிறது. இதன் தொடக்கமாக பந்தலில் இருந்து சங்க நாதம் முழங்கி, அது கேட்கும் தூரத்திற்குள் இருந்து “எழிலம்பால” எனும் மரத்திலிருந்து கிளை வெட்டி எடுத்து வரப்படவேண்டும். இதில் ஆசானும், பூஜை செய்யும் எல்லோரும் சாஸ்தாம் பாட்டு சகிதம், அருகில் உள்ள “எழிலம்பால மரம்” என்கிற மரத்தின் அடியில் சென்று பூஜை செய்து, அந்த மரத்தில் இருந்து ஆசான் சொல்லும் கிளை வெட்டப்பட்டு, தரை தொடாமல் கையில் ஏந்தி கொண்டு வரப்படுகிறது. இதை சுமந்து வரும் பொறுப்பு மணிகண்டனின் படையில் புதிதாக உள்ள வீரர்கள் கையில் ஒப்படைக்கப்படுகிறது. இந்த பால மரம், சாஸ்தாவின் உருவமாக கருதப்படுகிறது. அதனால், இதனை கொண்டு வரும் வழியெல்லாம் “மங்கைமார்” எனப்படும் கன்னிகைகள் கையில் “தாளம்” என்னும் விளக்கேந்தி வரவேற்று கொண்டு செல்கின்றனர்.

“எழிலம்பால” மரத்திற்கு “எக்ஷி பால”, “தெய்வ பால” “சப்த பர்னா” (ஏழு இலைகள் ஒன்றாக உள்ளதால்) என பல பெயர்கள் உண்டு. “தேரவட புத்திசம்” என்ற பத்தியில், “முதலாம் புத்தன்” இந்த பால மரத்தை தனக்கு ஞானம் பெற போதி மரமாய் உபயோகித்துள்ளான்  என அறிந்து கொள்ள முடிகிறது. இம்மரத்திற்கு மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல விசேஷங்கள் சொல்லப்படுகிறது.












இந்த பூஜையில் பால மரம் பூஜிக்கப்பட்டு அதன், பால், இலை, பூ ஆகியன கொண்டு ஒரு வித மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து அரவம் விஷம் முதல் வயிற்று உபாதை போன்ற பல நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. “சாஸ்தா” வின் உருவமாக கருதப்படும் பால மரம் எடுத்து வரப்படும்போது மணிகண்டனின் படை வீரர்கள் ஆவேச கோஷம் இட, படை தளபதிகள் தங்கள் ஆயுதங்களுடன், நடனமாடியபடி புடை சூழ வருகின்றனர். இந்த பால மரத்துக்கு வெளிச்சமாக விளக்கும், தீபமும், சங்க நாதமும் துணை வருகிறது.

நான்காம் யாமம்

பால மரம் பந்தலை அடைகையில், ஆசான் மற்றும் சீடர்கள் உடுக்கை வாத்தியம் இசைத்து தளபதிகள் நடனத்துடன் வரும் “தர்ம சாஸ்த்தா” வை “எதிறேல்ப்பு” எனும் தாளத்தில் ஆட வைத்து ரசித்து பந்தலுக்குள் சகல மரியாதைகளுடன் கொண்டு செல்கின்றனர். விவசாய மக்களின் மூலமான நெல், விதைகள் “பர” எனப்படும் “குருனியில்” நிறைக்கப்பட்டு, பாக்கு மரத்தின் பூக்கள் அதன் மேல் வைக்கப்படுகிறது. இது ஒரு மங்கள நிகழ்வின் அடையாளமாக காணப்படுகிறது. இதன் பொருள் அந்த ஆண்டு அல்லது போக விளைச்சலில் உணவு தானியங்கள் முதல் வருமான தானியங்கள் வரை எல்லாவற்றிற்கும் சிறந்த விளைச்சல் தந்தமைக்கு நன்றி என்றும் மேலும் சிறக்க வேண்டியும் ஆகும். இந்த செயலுக்கு மற்றொரு மாண்பும் அடங்கியுள்ளது. விளக்கு பூஜையை நடத்தி தரும் ஆசான் மற்றும் அவரது சீடர்களின் வாழ்வாதாரத்திற்கான நெல், விதை போன்றவை இந்த பூஜை நடத்துபவரால் தரப்படுகிறது. பாலக்கொம்பு சாஸ்தா ஆலயத்தில் வைக்கப்பட்டு தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது நடனம் ஆடி வந்த படை தளபதிகள் அரசனுக்கும், மற்றவர்க்கும் தம் போர் திறமைகளை செய்து காட்டுகின்றனர். அப்போது செண்டை முதற்கொண்ட வாத்தியங்கள் முழங்குகின்றன. வாத்தியத்திற்கு ஏற்ப ஆடி தமது போர்க்கலைகளை வெளிப்படுத்துவது தனி அழகாகும்.  மஹா பாரத யுத்தம் முதல் கொண்டு கலிங்கத்து போர் வரை, யுத்த காலத்தில் வாத்திய கோஷங்கள் இருந்தது என்பது எல்லாவரும் அறிந்ததே. இதன் மூலம், வாத்தியங்களுக்கும், போருக்கும், போர் முறைக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருந்து வந்ததை உணர முடிகிறது.







ஐந்தாம் யாமம்

பந்தலை வந்தடைந்த பால மரம், ஆயுதங்கள், சாஸ்தா, உப தேவைதைகள் என எல்லாவருக்கும் “அத்தாழ பூஜை” எனப்படும் “உணவூட்டு” நடைபெறுகிறது. பிறகு படையணியின் வாத்திய மற்றும் கலைஞர்கள் தங்கள் கலைகளை வெகு ஈடுபாட்டோடு வெளிப்படுத்துகின்றனர். இதை அவர்கள் இறைவனுக்காய் மட்டும் செய்கின்றனர். ஏனென்றால் செல்லும் போரில் வீர மரணம் அடைந்தால், தங்கள் மனதுக்கு நெருக்கமான தலைவனாகிய இறை தன்மைக்காய், இனியொரு முறை செய்ய இயலாமல் போய் விடுமோ என்ற ஐயத்தினால். மேலும் பல கலைகள்  அறிந்த குருக்கள் இந்த வேலையில் இறைவனை அல்லது இறை தன்மையை  குறித்து பாட்டாலும், தம் பேச்சாலும் படை வீரர்களுக்கு உபதேசிக்கின்றனர்.

ஆறாம் யாமம்

வாத்திய கோஷங்கள், பாடல்கள் மற்றும் உபதேச, உபன்யாசம் முடிந்ததும், “சாஸ்தாம் பாட்டு” என்ற உடுக்கு அடித்து பாடும் நிகழ்ச்சி தொடங்குகிறது. “மாபதி” ஆகிய ஆசான் மற்றும் அவரது சீடர்கள் குழு, “கைலாச பர்வம்” தொடங்கி, “ஐய்யப்பன் ஜனனம்”, “அம்ருத பூஜை” வரை பாடி எல்லாவருக்கும், “தர்ம சாஸ்தா” வின் அவதாரம் குறித்தும் ஐய்யப்பன் சரித்திரம் குறித்தும் பாடி விளக்குகின்றனர். இந்த பாடல்கள் கிராமிய கலையின் எடுத்துக்காட்டாகும். அவர்கள் ஒவ்வொரு கதையையும், அதில் வரும் கதா பாத்திரங்களையும் வருணிப்பது மிகவும் அழகானது.

சரித்திர பாட்டுகள் முடிந்ததும் “மாபதி” யின் குழுவில் ஒருவர் தன் தலையில் “தட்டு” மற்றும் “கிண்டி” என்கிற ஜல பாத்திரத்தை தலையில் வைத்து கொண்டு அமர்ந்திருக்கிறார். ஆசான் தொடங்கி அவரின் மூத்த சீடர்கள் “காணி பாட்டு” “பொளிப்பாட்டு” என்ற பாடலில் நகைச்சுவையாக பல விஷயங்களை சொல்லி கொடுப்பர். முக்கியமாக செல்லும் வழியில் உள்ள மலைகள், அதன் சிறப்பு, எச்சரிக்கை நடவடிக்கை போன்ற விஷயங்களோடு, நையாண்டியும் சேர்த்து பாடுகின்றனர். பாடலை கேட்டு ரசிக்கும் அன்பர்கள் தாம் விரும்பும் காணிக்கையை அந்த தட்டிலும், கிண்டி எனும் பாத்திரத்திலும் சேர்க்கின்றனர். இந்த காணிக்கைகள் ஆசான் மற்றும் குழுவினரின் திறமைக்கு கிடைத்த பரிசாய் மாறுகிறது.


ஏழாம் யாமம்

உடுக்கு பாட்டு முடிந்ததும், மணிகண்டனும், படையும் புலிப்பால் எடுக்க புறப்பட தயாராகின்றனர். அதற்கு தேவையான  கிண்டி எனும் ஜல பாத்திரம் மற்றும் இதர சாதனங்களுடன் ஆசான், தேவி பூஜை நடத்தி படை தளபதிகளை தயார் படுத்துகிறார். ஆசானின் சீடர்கள் உடுக்கடித்து பாட்டு பாடி தேவியின் புகழையும், துணை வர வேண்டுதலையும் வைக்கின்றனர். தேவிக்கான பூஜை வடக்கு பாகத்தில் நடத்தப்படுகிறது.

எட்டாம் யாமம்

எட்டாம் யாமத்தில், திரி உழிச்ச்சல், கனல் சாட்டம் எனும் கலை நிகழ்வை நிகழ்த்தி காட்டுகின்றனர் படை வீரர்கள். இது அவர்களின் பயிற்சியின் உச்சத்தை காட்சிப்படுத்துகிறது. இதன் பிறகு, வேட்ட விளி எனும் பயிற்சி, பாடல் மூலம் பாடி உணர்த்தப்படுகிறது. இந்த நேரம் வடக்கு வாயிலில் பூஜை செய்யப்படுகிறது.

வேட்ட விளி முடிந்தவுடன், வாபரன் என்ற மாபெரும் வீரனை வெல்ல வேண்டி அதற்கான போர் தந்திர ஒத்திகை நடைபெறுகிறது. பின்னாளில் இந்த நிகழ்வு “ஐய்யப்பன்” “வாவர்” வெட்டும் தடவும் என்ற பெயரில் நடத்தப்படுகிறது.



இறுதியாக, சாஸ்தா மற்றும் பரிவாரங்களை அம்பலத்தில் இருந்து வெளியே எழுந்தருள செய்து ‘குருதி அர்ப்பணம்” எனும் குங்கும கலவை தயாரித்து அர்ப்பணம் செய்யப்படுகிறது. இதன் பொருள் தர்மத்தை நிலை நாட்ட என் குருதியையும் அர்ப்பணம் செய்ய துணிகிறேன் என ஒவ்வொரு படை வீரனும், மறவர்களும் மனதார வாக்கு தருகின்றனர். பிற்காலத்தில் இது, பலியிடுதல் என மாற்றுரு பெற்றது. ஆனால் இது தவறான வழி காட்டுதல் ஆகும். செய்த பூஜையில் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டி “மாப்பு” எனும் நிகழ்வின் மூலமாக மன்றாடப்படுகிறது. இறை தன்மையிடம் விடை பெற்று ‘சாஸ்தா விளக்கு” நிறைவு பெற்று மணிகண்டனும், படையும் தங்கள் இலட்சியத்திற்கான பயணத்தை தொடர்கிறார்கள். அவர்கள் பயணம் தொடங்க சுற்றம், சுழல் எல்லாம் இனி இவரை காண்போமா என நினைந்து கண்ணீர் மல்க பிரார்த்தனையுடன் வழி அனுப்புகின்றனர்.

இத்துடன் "சாஸ்தா விளக்கு பூஜை" இனிதே நிறைவுறுகிறது.

பயணம் புறப்பட்ட மணிகண்டனும் படையும், எருமையை கொன்று “அலசா” (அழுதா) நதிக்கரையில் அடக்கம் செய்து, வாபரனை வீழ்த்தி, உதயணனை வென்று, காட்டு வழி கடந்து “அம்பா” (இன்றைய பம்பா) நதிக்கரையை அடைந்து, தாம் இது வரை போரின் காரணமாக கொன்ற பலரின் ஆன்மாவின் சாந்திக்கு வேண்டி தர்ப்பணம் செய்து பிறகு உணவருந்தி சாஸ்தாவை “கால் விளக்கு” எனும் முறையில் “அம்பா” நதிக்கரையில் நினைந்து, தியானம் செய்து பாடல், நடனம் மூலம் உள் முக தியானம் செய்து தீபங்கள் ஏற்றி ‘அம்பா” நதியை வழிபட்டு பயணிக்கின்றனர். பயணத்தில் சபரியின் தியான பலம் உணர்ந்து, தமது ஆயுதங்களை தியாகம் செய்து, நிஷ்களங்க மனதுடன் தர்ம சாஸ்தாவை பொன்னம்பல மேடு என்னும் இடத்தில் தரிசனம் செய்து திரும்புகின்றனர்.





புலிப்பாலுடன் திரும்பிய மணிகண்டன், தன் கடமைகளை நிறைவேற்றி தன் மன ஆசையை தனது தந்தையிடம் சொல்கிறான். ஆணைப்படி, சபரிமலையில் மணிகண்டன் தியானத்தில் அமர அவன் சொன்ன விதிப்படி ஆலயம் அமைக்கப்படுகிறது. ஒரு முடியில் சாஸ்தா பூஜைக்கான பொருளும், மற்றொரு முடியில் தனக்கான பொருட்களுடன் முன்பு புறப்பட்டது போல், மணிகண்டன் மீண்டும் புறப்பட்டு, தன் ஆலயத்தில் சாஸ்தாவை பூஜித்து “அபய சின் முத்திரையுடன் கூடிய த்யானபிந்து ஆசனம்”, “யோகபர்ண முத்திரையுடன் கூடிய கிரஹ நாரிய ஆசனம்”, “அபான பாந்த முத்திரையுடன் கூடிய குத பாத ஸ்ரேஷ்டாசனம்” மற்றும் “பத்ராசன முத்திரையுடன் கூடிய அஷ்டகோண சாஸ்தாசனம்” ஆகிய நிலையில் யோக நிஷ்டையில் ஆழ்ந்து தன் ஆன்மாவை “சாஸ்தா” வில் லயிக்க செய்து பிறப்பருக்கிறான்.





















சபரிமலை, விரதம், மலை யாத்திரை, சபரி மலை கோயில் ஆகியவை எப்படி அறிவியல் பூர்வமானவை என்பதை வேறொரு பதிவில் பார்ப்போம். அது வரை, சாஸ்தா விளக்கு எங்கு நடந்தாலும் “தர்மத்தை” நான் கடைப்பிடிப்பேன், நிலை நாட்டுவேன் என மனதார உறுதி எடுத்து அந்த பூஜை சிறப்புற நம்மால் ஆன பங்களிப்பை தருவோம்.


திங்கள், 22 டிசம்பர், 2014

ஐய்யப்பன் விளக்கு பூஜை

ஐய்யப்பன் விளக்கு பூஜை


முன் பதிவுகளில் கூறியது போல், கார்த்திகை, மார்கழி காலங்கள் தென்னிந்தியாவின் ஆன்மீக நிகழ்வுகளின் காலம் என்று கூறலாம். இந்த இரு மாதங்களும் பலரின் நெஞ்சுக்கு நெருக்கமானவை. இந்த காலங்களில் தென்னிந்தியாவில் நிகழும் பல ஆன்மீக நிகழ்வுகளில் மிகவும் பிரபலமானதும், வித்தியாசமானதும் சபரி மலை புனித யாத்திரை ஆகும். இந்த காலங்களில் சபரி மலைக்கு செல்ல விரதம் இருந்து இரு முடி தலை சுமந்து, பெரும் காட்டு வழிகளை கடந்து சென்று, ஜோதி வடிவில் ஐய்யப்ப ஸ்வாமியை தரிசித்து பிறப்பறுக்க வரம் கோரும் (முயற்சி செய்யும்) நிகழ்வு பல்லாண்டுகளாக நிகழ்ந்து வரும் ஒன்று. இப்படி பிறவாமை வரம் கேட்டு செல்லும் அன்பர்களை அந்த கோயிலின் இறைவனின் பெயராலேயே “ஐய்யப்பன்” என்று அழைப்பது வழக்கமாக உள்ளது. இப்படி பலர் சேர்ந்து செய்யும் ஒரு விசேஷ பூஜையே இன்று நடைமுறையில் உள்ள  “ஐய்யப்பன்  விளக்கு பூஜை” ஆகும். இந்த பதிவு அத்தகு சிறப்புடைய “ஐயப்பன் விளக்கு பூஜையை” குறித்தது.

“ஐயப்பன் விளக்கு பூஜையை” பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் “ஐய்யப்ப ஸ்வாமி” யை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம். “ஐய்யப்ப ஸ்வாமி” என்று சொன்னதும் “சூர்பகன்” “மோஹினி அவதாரம்” “பந்தள ராஜா” “மஹா ராணி” “புலிப்பால்” “சபரிமலை கோயில்” “மகர ஜோதி” “இருமுடி” “நெய் அபிஷேகம்” என சில வார்த்தைகளில் அடைத்து வசதியாக சொல்லி விடுவது வழக்கம். இவை எல்லாம் உருவக அலங்கார கதைகளே அன்றி யதார்த்த உண்மை பொருள் ஆக வாய்ப்பில்லை. இதனால் தானோ என்னவோ “பிறப்பறுப்பு” என்ற உன்னத குறிக்கோள் உடைய அந்த ஆலயம் இன்று தன்னுடைய பிரதான குறிக்கோளில் இருந்து பிழறி நெடுந்தூரம் சென்று வணிக மயம் ஆகி விட்டது. இதற்கு பல காரணங்கள் உண்டு. ‘கால மாற்றம்”, “கலாசார மாற்றம்” “மக்களின் நேர்மையின்மை” “மக்களின் ஆசை மற்றும் சுயநலத்தால் விளையும் பயம்” “நல்ல குருமார்கள் இல்லாது போதல்” என அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றில் எதுவானாலும், அது அந்த சமயத்தை வெகுவாக பாதிக்கிறது.

இத்தகு சில தவறான போக்குகளை பற்றிய சரியான புரிதலை உண்டு செய்து, நடைமுறை, யதார்த்த சிந்தனையை தூண்டும் நோக்கில் பதியப்படுகிறது இந்த பதிவு. அப்புரிதல் உண்டாவதற்கு நாம் இப்பதிவின் கருவில் இருந்து சற்று விலகி பின்னோக்கி செல்லுதல் அவசியம் ஆகிறது. விலகி சென்றாலும் விரைவில் திரும்பலாம்.

ஹிந்து மதம் ஒரு மதம் அல்ல

மனித இனம் தோன்றி பல அடுக்கு, பரிணாம வளர்ச்சியை இன்று அடைந்துள்ளது. இந்த பரிணாம வளர்ச்சி பாதையில் பல விபரீதங்களுக்கு பிறகு, மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்ற நோக்கில் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் சாட்சி நிலையில் இருந்து பார்த்து, ஆய்ந்து, அந்த நிலைகளுக்கு ஏற்றவாறு வாழ்வியல் கோட்பாடுகளையும், விதிகளையும், சட்ட, திட்டங்களையும் வகுத்து அதன் மூலம் இயற்கையின் ரகசியத்தை உணர வைக்க ஒரு மார்க்கம் உண்டாயிற்று. அதன் பெயர் “சநாதன தர்மம்”.

“சநாதனி” என்றால் பிரித்தறிதல் என்றும் “தர்மம்” என்றால் “முறை” அல்லது “வாழ்வியலுக்கான முறை” என்றும் பொருள் உண்டு. மனித வாழ்வியலுக்கான மற்றும் இயற்கையின் உன்னதத்தை பிரித்தறிய அடிகோலும் வழிமுறைகள் அடங்கிய இந்த சநாதன தர்மம் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த பூமியின் ஒரு பகுதியில் பின்பற்றப்பட்டும், அதை பின்பற்றிய மனிதர்கள் கலாசார ரீதியாக மேம்பட்டும், அறிவியல் ரீதியாக பெரிய ஞானம் பெற்றும் இருந்தனர். அவர்கள் தான் இன்று வரலாறு கூறும் “சிந்து நதிக்கரையில் வாழ்ந்த, அரேபியரால் “அல் ஹிந்த்” என்றும் ஆங்கிலேயரால் “ஹிந்துக்கள்” என்றும் அடையாளம் காணப்பட்ட மக்கள். “ஹிந்து’ என்ற பெயர் அரேபியர்களும், ஆங்கிலேயர்களும் தங்கள் வசதிக்காக இட்ட பெயர். இன்றைய ஹிந்து மதம் என்று கூறப்படும் “சநாதன” தர்மத்தை பின்பற்றுபவர்களுக்கு “சநாதனர்” என்று பெயர் உண்டு. ஒரு விஷயத்தை புரிய வைப்பதில் “எடுத்துக்காட்டுகளும்” “உருவகங்களும்” பேருதவி செய்கிறது. இந்த நுண்ணிய திறனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்பாக கையாண்ட ஒரு மார்க்கம் உண்டெனில் அது “சநாதன தர்மம்” என கூறி விடலாம். “சநாதன தர்மம்” முற்றிலும் அறிவியல் சார்ந்த சிந்தனை உடையது. இதையே

“ஆன்மீகத்தின் அடிப்படை பகுத்தறிவும், பகுத்தறிவின் உச்சம் ஆன்மீகம்”

என்றும்  என்னுடைய முன் பதிவில் பதிந்திருந்தேன். இதன் பொருள் ஆன்மீகம் என்பது சநாதன தர்மத்தில் “அறிவியலே” ஆகும். அதாவது “நான் யார்” என்ற பகுத்து அறியும் தேடல் மூலம் இந்த பிரபஞ்சத்தின், இயற்கையின் பாதையை பின் தொடர்ந்து சென்று, அறிந்து அதன் ஆதி புள்ளி அல்லது சூட்சமம் எது என்று கண்டு அறிதலே ஆகும். சநாதன தர்மத்தில் இந்த ஆதி புள்ளிக்கு “பிரம்மம்” என்று பெயர்.

ஒன்றோ அல்லது பல கருத்துக்களை குறித்தோ ஆராய்ந்து அதன் உண்மை பொருள் கண்டவர்களை “ஞாநி” என்று கூறுவதுண்டு. அப்படி, மேலே சொன்ன பிரம்மத்தை குறித்த ஆய்வை தொடர்ந்து தெளிவு பெற்றவர்களை “பிரம்ம ஞாநி” என்று அழைத்தனர். இப்போது புரிந்திருக்குமே சநாதன தர்மம் முற்றிலும் அறிவியல் சார்ந்தது என்று. சில, பலரின் சுய நல நோக்கினால் சநாதன தர்மம் என்ற இந்த அறிவியல் சார்ந்த மார்க்கம் இன்று வெறும் “பூச்சாண்டி மதம்” “மூட நம்பிக்கைகளின் குவியல்” என்று தோற்றம் அளிப்பது வேதனைக்குரிய விஷயம். 

சநாதன தர்மப்படி, ஒரு விஷயத்தை நிர்வகிப்பவர் “சாஸ்தா” என்றழைக்கப்படுகிறார். அதன் படி, தர்மங்களை நிர்வகிப்பவர் “தர்ம சாஸ்தா” என்றழைக்கப்படுகிறார்.

அஹம் பிரம்மாஸ்மி” அல்லது “அண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளது” என்ற உன்னத அறிவியல் கோட்ப்பாட்டை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உலகுக்கு எடுத்து சொன்ன மார்க்கம் “சநாதன தர்மம்”. சரி, இந்த அண்டத்தில் உள்ளதை நம் பிண்டத்தில் எப்படி அறிந்து கொள்வது? அதற்காக “சநாதன தர்மம்” பல வழிகளை வகுத்துள்ளது. அவற்றில் தலையாயது “ஞான” “கர்ம” “ராஜ” “பக்த” மார்க்கங்கள். இந்த நான்கு மார்க்கங்களே நம் ஆலயங்களில் சூசகமாக சொல்லப்படும் நான்கு கோபுரம் எனப்படும் பிரம்மத்திற்க்கான வாயில்கள். எந்த வாயில் வழியாகவும் சென்று பிரம்மம் எனும் கருவறை சூட்சமத்தை அறியலாம் என்பதன் உருவகமே அது. இந்த நான்கு மார்க்கத்தையும் பற்றி விரிவாக வேறொரு பதிவில் பார்ப்போம். ஆனால் இந்த பதிவின் கருவாகிய சபரிமலை இந்த நான்கு மார்க்கத்தையும், அறிவியல் மூலத்தையும் எப்படி அறிய உதவுகிறது என்பதை பற்றி சிந்திப்போம்.

இங்ஙனம் பல விஷயங்களை நாம் அலசுவது, இவற்றை பற்றி படித்து, சிந்தித்து, தெளிவடைந்து மற்றவருக்கு விளக்கி “சநாதன தர்மம்” என்ற இக்கால “ஹிந்து மதம்” தன் உயரிய அறிவியல் பாதையிலிருந்து சுயநல, வியாபார நோக்கங்களுக்காக மூட நம்பிக்கைகளால் நிரப்பப்பட்டு அதன் விளைவாக “என் கருத்தே பெரிது” என்ற முட்டாள் தனம் வளர்ந்து ஒருவரை ஒருவர் தம் கருத்துக்காக மாய்த்து சநாதனர் இல்லாது போக கூடாது என்பதற்கான சிறிய முயற்சி.


சபரி மலை, சாஸ்தா, ஐய்யப்பன்

சபரி மலை

சபரி மலை, இன்று வழக்கில் உள்ள ஐய்யப்பன் எனப்படும் மணிகண்டனுக்கு முன்னமே இருந்த ஒரு மலை என்பதை நான் உணர வேண்டும். இராமனின் காலத்தில் இங்கு வாழ்ந்த “சபரி” என்ற ஒரு பெண் துறவியின் பெயரால் இந்த மலை அழைக்கப்படுகிறது. சபரிக்கு ஒரு முன் கதை உண்டு. அவள் பெயரால் அழைக்கப்படுவதற்கு பெரிய காரணம் அவளது யோக ஞானமும், பக்தியும் ஆகும். அவள் யோக ஞானத்தில் சிறந்தவளாகவும், பக்தியினால் மிகவும் அடக்கம் உடையவளாகவும் இருந்ததினாலேயே அவளது புகழ் தொழில் நுட்ப வளர்ச்சியே இல்லாத அக்காலத்திலும், இன்றைய கேரளாவில் இருந்து பல மைல் தூரத்தில் சரயு நதிக்கரையில் உள்ள அயோத்யா வரை சென்றடைந்தது. இதன் பொருள் யோகம் என்கிற சுய சோதனையும், அதனால் கிடைக்கும் ஞானத்தால் செருக்கும் கொள்ளாதிருந்தால் உங்கள் பெயர் உலக புகழ் அடைவதோடு சர்வ வல்லமையுடைய பேரரசர்களும் உங்களை தேடி வருவர் என்பதே.

சாஸ்தா

மேலே குறிப்பிட்டது போல் தர்மத்தை பரிபாலனம் செய்பவர் “தர்ம சாஸ்தா’ ஆகிறார். இந்த சபரி மலையில் உள்ள ஆலயத்தில் “தர்ம சாஸ்தா” ஆட்சி செய்கிறார். இன்றைய காலகட்டத்து மொழியில் சொல்ல வேண்டுமானால் ஒரு பெரிய நிறுவனத்தில் பல கிளைகள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் ஒரு நிர்வாகி இருப்பார். அந்த நிர்வாகி அந்த கிளையை பொறுத்தவரை சகல வல்லமை கொண்ட இயக்குனர் அல்லது உரிமையாளரின் பிரதிநிதி ஆக உள்ளார். அந்த கிளையை பொறுத்தவரை அந்த நிர்வாகி சகல வல்லமை உடையவராக உள்ளார். ஆனால் பெரிய அளவில் பார்க்கையில் இயக்குனர் அல்லது உரிமையாளரின் பிரதிநிதியாக இருக்கும் அவர் இயக்குனர் அல்லது உரிமையாளரின் அளவுக்கு வல்லமை இல்லாதவராகிறார் (Branch Manager Vs owner). இது நிகழ்கால எடுத்துக்காட்டு. இந்த முறையில், இவ்வுலகின் இயற்கை சூட்சுமத்தை உணர்ந்தவரும், அதை அறிய உதவும் வழி முறைகளை அறிந்தவரும், அந்த வழி முறைகளை யாவரும் சரிவர பின்பற்ற வைப்பவருமாகிய “ஆதி யோகி” என்றழைக்கப்பட்ட “தர்ம சாஸ்தா” வின் அவதாரம் (representative) தான் இந்த சபரி மலையில் வாசம் செய்த “தர்ம சாஸ்தா”. பல கால கட்டங்களில், பல “தர்ம சாஸ்தா” உருவெடுத்தே இருந்துள்ளனர்.

ஐய்யப்பன்

“ஐய்யப்பன்” என்பது விளிப்பெயரே அன்றி நிஜப்பெயர் அல்ல. அதே போல் மணி கண்டன் என்பதும் பிற்காலத்தில் வழங்கப்பட்ட உருவகப்பெயரே அன்றி உண்மை பெயர் அல்ல. ஐயப்பன் என்ற பெயருக்கு “அய்யா” “அப்பன்”  என்ற பொருள் உண்டு. நம் கலாச்சாரப்படி, மதிப்பிற்குரிய ஒருவரை நாம் அவர் பெயரிட்டு அழைப்பதில்லை. மாறாக "அய்யா" “அய்யன்” என்றும் “அப்பன்” “அப்பா” என்றும் அழைப்பதுண்டு. மேலும் தொழில் ரீதியாகவும் அழைப்பதுண்டு. உதாரணத்திற்கு “சேகர்” என்பது ஒருவரது பெயர். அவர் “தாசில்தார்” என்ற பதவியில் பல காலம் இருந்ததால் “தாசில்தார்” எனவும் “தாசில்தார் சேகர்” எனவும் பெயர்மாற்றம் பெறுகிறார். அது போலவே “தர்மத்தை சாஸ்த்துவம்(பரிபாலனம்)” செய்பவர் ‘தர்ம சாஸ்த்தா” என்று அழைக்கப்படுகிறார். அதுதானே சரியாகும்!. அப்படி என்றால் இப்போது வணங்கப்படும் “ஐய்யப்பன்” யார்?

தர்மத்தை சாஸ்தவம் அதாவது நிர்வாகம் செய்யும் பணியில் பலர் உண்டு. அதில் ஒருவர்தான் “ராஜன்” அல்லது “அரசன்”. இதனால் தான் அரசனை இறைவனுக்கு நிகராக கண்டார்கள். அதாவது “தர்மத்தை நிலை நாட்டுபவன்”. அந்த அரசனுக்கான பல விதி முறைகள் சநாதன தர்மத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் தலையாயது “மக்களுக்கு சேவை செய்தல்”. அந்த சேவைக்காக அவ்வரசன்  எதையும் செய்ய துணிந்தவனாகிறான். அப்படித்தான் பாண்டிய நாட்டை ஆண்ட சேகரன் (ராஜ என்பது அடை மொழி) என்னும் மன்னன் தன் ராச்சியத்தின் பகுதிகள் தீயவர் ஆளுகையில் இருப்பதையும் அதை தடுக்க தன்னால் இயலவில்லை என்பதால், அதற்காக ஒரு வல்லமை உள்ள சக்தி வேண்டும் என வேண்டி மணி கண்டனை கண்டெடுக்கிறான். அவனுக்கு அரசன் ஆவதற்கான  எல்லா வித்தைகளும் கற்று கொடுக்கப்படுகிறது. கலைகளோடு, இயற்கை சூட்சுமத்தை உடல் வழியே அறியும் யோக கலையும் கற்று கொடுக்கப்படுகிறது.

கல்வியில் சிறந்த மணிகண்டன் தன் தந்தையின் வேண்டுக்கோள் படி, தீயவரை வெல்லவும், தன் வளர்ப்புத்தாயின் நோய் நீங்க மருத்துவ விதிகளுக்கு ஏற்ப “புலிப்பால்” கொண்டு வரவும் காட்டிற்கு செல்கிறான். தன் குருமார்களின் வழிக்காட்டுதலில் இயற்கை சூட்சுமத்தை அறியும் வழியை அறிந்த மணிகண்டன் அவ்வழியின் இறுதி நிலையாகிய பிறப்பு அறுத்தலை செய்ய விழைகிறான். இந்த மூன்று விஷயங்களின் உருவக கூட்டு கலவையே இன்றைய சபரி மலை யாத்திரை.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், மணிகண்டனின் காலத்திற்கு முன்பே இந்த மலை குறித்தும், அங்கிருந்த சாஸ்தா ஆலயம் குறித்தும் கந்த புராணம் முதற்கொண்டு யுவான் சுவாங் எழுதிய பயண குறிப்பேடு வரை பல சான்றுகள் உண்டு. உதாரணத்திற்கு, யுவான் சுவாங் எழுதிய பயண குறிப்பேட்டில் இப்போதைய சபரி மலை பகுதியை (வேறு பெயரில்) குறிப்பிட்டு அங்கு ஒரு “புத்தன்” ஆலயம் இருந்ததென்றும், அங்கு வழிபட நிறைய மக்கள் சென்று வந்தனர் என்றும், அந்த யாத்திரையில் பலர் மரணம் அடைந்தனர், இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் செல்லத்தான் செய்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளான்.

சநாதன தர்மத்தில் “புத்தன்” என்றால் ஞானம் நிறைந்தவன், “ஞாநி” என்ற பொருளும் உண்டு. இப்பொழுது வணங்கப்படும் “கௌதம புத்தர்” புத்தர்களின்  வரிசை கிரமத்தில் இருபத்தி எட்டாவது  புத்தர் ஆவார். புத்தம் என்பது ஞானத்தின் தேடலுக்கான ஒரு வழியே அன்றி தனி மதமாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் சபரி மலைக்கு இன்றளவும் உள்ள விதி முறைகளை நடைமுறை வழக்கில் (practical approach) ஆராய்ந்தால் தற்பொழுது உள்ள புத்த மதத்தின் கோட்பாடுகளோடு ஒத்துப்போகும். கௌதமன் மற்றும் அவனுக்கு முன் இருந்த புத்தர்கள் பின்பற்றிய மார்க்கத்தின் பிறப்பிடம் எது, பின்பற்றிய வழிமுறைகள் யாதென்ற ஆராய்ச்சி நமக்கு இங்கு வேண்டியதாகிறது. மேலும் சொல்ல வேண்டுமானால் “ஐய்யப்பன்” பூஜைகளில் யோக கலையின் முக்கிய அம்சமான மூச்சு பயிற்சியின் ஒரு பகுதியான “தர்ம சாஸ்த்தா அஷ்டோத்திரம்" (நூற்றியெட்டு) மற்றும் "சஹஸ்ர நாமம்" (ஆயிரத்தெட்டு) ஆகியவற்றில் “மஹா புத்தாய நம:” என்று சொல்வதுண்டு. இது ‘புத்தரை” குறிப்பதன்று. மாறாக “பெரிய ஞானியே” என்ற பொருளில் ஆனது. சரி, சபரி மலை என்ற பகுதியில் “புத்தன்” ஆலயம் என்கிற “சாஸ்தா” ஆலயம் இருந்தது என்று நாம் உறுதி கொள்வோம். அதற்கும் சபரி மலைக்கும், சபரி மலை யாத்திரைக்கும், இப்பொழுது நடை முறையில் உள்ள ஐய்யப்ப விளக்கு பூஜைக்கும் என்ன தொடர்பு? பார்ப்போம்.

சபரி மலை, சாஸ்தா ஆலயம் என்றும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் இந்த சாஸ்தாவின் பக்தன் என்றும், அவனது வளர்ப்பு மகன் என்று சொல்லப்படும் “மணி கண்டன்” என்பவன் சகல வித்தைகளையும் கற்று, யோக வித்தைகளையும் கற்று தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற புறப்படுகிறான் என்பதில் எந்த வித உருவகமும் இருக்க வாய்ப்பில்லை. சரி. அப்படி புறப்படும் சிறுவன் தனியே செல்ல இயலுமா?இயலாது. எனவே, தான் வித்தை பயின்ற “ஆலங்காடு” “அம்பலப்புழை” ஆகிய பள்ளிகளில் இருந்தும், தன் அரசனிடமிருந்தும் படையை திரட்டுகிறான். எல்லா வீரர்களும் ஒன்று திரட்டப்படுகிறார்கள். அவர்களை வழிநடத்த இரு படை தளபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இரு தளபதிகளும் “வெளிய கடுத்த” (பெருஞ்சிருத்தை) “கொச்சு கடுத்த” (சிருஞ்சிருத்தை) என்று அழைக்கப்படுகிறார்கள். இன்றும் நம் படைகளில் முக்கியமாக உள்ளவர்களை, சுபேதார், கர்னல், கமாண்டர், சோல்ஜர் என்று ஆங்கிலேய மொழியில் அழைத்து பெருமைப்பட்டு கொள்கிறோமே அதைப்போல!. படை திரட்டப்பட்டு, போர் வியூகங்கள் வகுக்கப்படுகிறது. மலை பிரதேசம் ஆதலால் ஒவ்வொரு மலைக்கும், அந்த மலையை குறித்து நன்கு அறிந்த ஒரு தளபதி அந்த மலையின் பெயரால் (தலைச்சேரி முண்டன், கரிமல முண்டன், தலைப்பார முண்டன் என) போர் விதிப்படி அடையாளம் காணப்படுகிறார்கள். இதில் "கரி" என்கிற கொடிய யானைகளை கொண்ட கரிமலைக்கும், அதன் தளபதியான கரிமல முண்டனுக்கும் சில சிறப்புகள் உள்ளதாக "தாளியோல" எனப்படும் "ஓலைசுவடியில்" குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் யாவரும் மணிகண்டனை போல் பல வித்தைகள் மற்றும் போர்க்கலையை கற்றவர்கள் ஆனால் யோகக்கலையில் சிறந்தவர்கள் அல்லர்.
  
வகுக்கப்பட்ட போர் வியூகங்கள் வெற்றி பெற பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனைக்கான நாள் குறிக்கப்படுகிறது. படை வீரர்கள் ஒன்று சேர பக்தியுடன் பூஜையும் பிரார்த்தனையும், அதே நேரத்தில் கலாச்சார வெளிப்பாடாக கலை நிகழ்சிகளும் நடை பெறுகிறது. அது “சாஸ்தா விளக்கு” அல்லது “சாஸ்தா விளக்கு பூஜை” என்று அழைக்கப்படுகிறது.

சரி, இது வரையில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட கட்டு கதைகள் போல் இருந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அப்படி குழப்பமோ, கருத்து மாற்றமோ இருந்தால் வழக்கம் போல் செய்தி அனுப்புங்கள். அலசுவோம். ஐயமற ஆராய்வோம். 

சாஸ்தா விளக்கு பூஜையை குறித்து வரும் பதிவில் பார்ப்போம்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

பஞ்ச வாத்தியம்

பஞ்ச வாத்தியம்





                 


"இறைவனின் சொந்தம் நாடு" என அறியப்படும் கேரளம் என்கிற சேர நாடு, தாய் தமிழகத்தை போலவே பல கலைகளுக்கு பிறப்பிடம் என்ற மிக முக்கிய அந்தஸ்தும், அக்கலைகளை ரசிக்கவும் அதன் வளர்ச்சிக்காக பாடுபடவும் மனமுள்ள மக்களை கொண்டது என்பதும் வரலாற்று உண்மை. இத்தகு கலை ரசிகர்களை கொண்டதாலோ என்னவோ, கேரளம் தமிழ் நாட்டை போலவே கலைகளின் குவியலாக திகழ்கிறது.


 











பொதுவாக கேரள கலைகளில் குறிப்பிடும்படியாக அறுபத்து நான்கு கலைகளை “திருவிதாங்கூர் அரண்மனை” ஏடுகளில் காண முடிகிறது. இவை வரிசை கிரமமாக இல்லை என்றாலும், ஏறக்குறைய அவற்றின் காலக்கிரமத்திற்க்கு ஏற்றவாறு உள்ளதாக வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அக்கலைகள் கீழ் வருமாறு:

1.       அர்ஜுன ந்ருத்தம்
2.       ஆதி வேடன் கலி
3.       சாக்கியார் கூத்து
4.       நங்கியர் கூத்து (நங்கையர் கூத்து)
5.       ஷோபான சங்கீதம்
6.       ஒப்பன
7.       கரடி ஆட்டம்
8.       கம்பாடி கலி
9.       ஐவர் கலி
10.    கண்யார் கலி (கன்னியர் கலி)
11.    காக்கரிஷி கலி
12.    காளியூட்டு
13.    குருமார் கலி
14.    களமெழுத்து
15.    கூடியாட்டம்
16.    கும்மாட்டி கலி
17.    கொத்தாமுரியாட்டம்
18.    புல்லுவன் பாட்டு
19.    கருடன் தூக்கம்
20.    சவிட்டு கலி
21.    சாத்தான் கலி
22.    சோழி கலி
23.    மோஹினி ஆட்டம்
24.    தாளம் கலி
25.    திடம்பு ந்ருத்தம்
26.    திருவாதிர கலி
27.    தீயாட்டு கலி
28.    களரிப்பயட்டு
29.    துள்ளல்
30.    தெய்யம்
31.    தெய்யன்னம்
32.    தோல் பாவக்கூட்டு
33.    தவ்வு முட்டு
34.    புளிக்கலி
35.    நாகச்சுட்டு
36.    நாயக்கர் கலி
37.    படையணி
38.    பள்ளு கலி
39.    பாணியர் கலி
40.    பரிச்சமுட்டு கலி
41.    கூரன் கலி
42.    பதிச்சி கலி
43.    பாக்கனார் கலி
44.    பானக்கலி
45.    பூதம் கலி
46.    பூதனும்திரையும்
47.    பூரம் கலி
48.    பஞ்ச வாத்தியம்
49.    பத்ரகாளி துள்ளல்
50.    யக்ஷ கானா
51.    கூடியாட்டம்
52.    மலையிக்கூட்டு
53.    மங்களம் கலி
54.    கேரள நடனம்
55.    மார்க்கம் கலி
56.    முடியேட்டு
57.    முடியாட்டம்
58.    வடி தல்லு
59.    வட்ட கலி
60.    வில்லடிச்சான் பாட்டு
61.    வேடன் துள்ளல்
62.    வேள கலி
63.    சர்ப்பம் துள்ளல்
64.    பூதன் திர

மேற்கண்ட கலைகள் வெவ்வேறு நிகழ்ச்சிகளின் சூழலுக்கேற்ப நிகழ்த்தப்படுகிறது. இவற்றில் வாத்திய கலையில் “பஞ்ச வாத்தியம்” மிக முக்கிய இடம் வகிக்கிறது. 

கேரளா, தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, மும்பையின் செம்பூர், டும்பிவில்லி, டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் உள்ள கிருஷ்ணன், சிவன், ஐயப்பன், தேவி ஆலயங்களில் முக்கியமாக கார்த்திகை, மார்கழி காலங்களில் இந்த வாத்தியம் முக்கிய இடம் பெறுகிறது. நாமும் கேட்டிருப்போம், ரசித்திருப்போம். பஞ்ச வாத்தியம் குறித்த சில விஷயங்கள் இதோ.

பஞ்ச வாத்தியத்தின் தோற்றம் குறித்து சரியான குறிப்புகள் இல்லை என்றாலும், இந்த கலை பன்னெடுங்காலமாக பல ஆலயங்களை அலங்கரித்து மனங்களை கொள்ளை கொண்டு வருகிறது. பஞ்ச வாத்தியம் கடந்த 80 வருடங்களுக்கும் மேலாக ஆலயங்களை அலங்கரித்து வருகிறது. இன்றைய அளவில் இசைக்கப்படும் பஞ்ச வாத்தியத்தின் அடித்தளம் 1930 காலக்கட்டத்தில் மறு சீரமைக்கப்பட்டது. இந்த இசையின் ஜாம்பவான்களாகிய திருவில்லா மலை வெங்கடேஸ்வர ஐயர் மற்றும் அவரது சீடர் மாதவ வாரியர் மற்றும் குழுவினர் முயற்சியால் பதிகாலம் முதல் ஐந்தாம் காலம் வரை உள்ள தாள கட்டுக்கள் வரையறுக்கப்பட்டு மறு சீரமைக்கப்பட்டு புழக்கத்தில் வந்தது.

இரண்டு மணி நேரம் வரை நீளும் இந்த இசையின் இனிமைக்கு இதன் இசை கருவிகள் மிக முக்கியம் ஆகின்றன. மற்ற செம்பட மேளங்களை போல பஞ்ச வாத்தியத்திலும் இசை கலைஞர்கள் அரை பிறை வடிவில் நின்று இசைக்கின்றனர்.


                                         


மற்ற செம்பட மேளங்கள் குறை வேக தாள கட்டுகளில் தொடங்கி வேக தாள கட்டைகளை எட்டுவது போல் அல்லாமல் சங்க நாதம் மூன்று முறை முழங்கியதுமே வேக தாள கட்டைகளை அடைகிறது பஞ்ச வாத்தியம்.

பெயருக்கு ஏற்றதுபோல் பஞ்ச வாத்தியம் ஐந்து இசை கருவிகளுடன் இசைக்கப்படுகிறது. “திமில” “மத்தளம்” “இலத்தாலம்” “இடக்க” மற்றும் “கொம்பு” ஆகியவை பஞ்ச வாத்தியத்தின் இசை கருவிகள் ஆகும். இவ்வைந்தில் முதல் நான்கும் தாள வாத்திய குடும்பத்தையும், கொம்பு காற்றிசை குடும்பத்தையும் சார்ந்தது. மற்ற எல்லா செம்பட மேளங்களை போலவே பஞ்ச வாத்தியத்தின் தாள கட்டைகள் பிரமிட் அமைப்பில் வேகம் கூடி கொண்டே செல்லும் வகையில் அமைந்துள்ளது.

பஞ்ச வாத்திய குழுவின் நடுவில் நிற்கும் “திமில” இசை கலைஞர், இலதாளத்தின் உதவியோடு இந்த இசையை வழி நடத்தி செல்கிறார். அவர்களுக்கு எதிரில், மத்தளம் இசைப்பவர்களின் வரிசையும், அவர்களுக்கு பின்னால் கொம்பு இசைப்பவர்களும் அணி வகுக்கிறார்கள். “இடக்க” இசை கலைஞர்கள் பொதுவாக இருவராகவும், இரு பக்கமும் திமிலை மற்றும் மத்தளத்துக்கு நடுவில் நின்று இசைக்கின்றனர். “சங்கு” மூல மற்றும் மங்கள இசையாக நிற்கிறது. “திமிலை” பஞ்ச வாத்தியத்தின் “பிரமான” வாத்தியம் ஆகும். இதில் இசை கலைஞர்களின் எண்ணிக்கை 12 முதல் 54 அல்லது 55 என நிகழ்ச்சி, நேரம், மற்றும் சூழலுக்கேற்ப இருக்கும்.

ஒவ்வொரு மத்தளமும் இரண்டு திமிலைகளாலும், ஒவ்வொரு திமிலைக்கும் சமமான எண்ணிக்கையில் கொம்பும், இலத்தாலமும் இருக்கும். ஒரு “இடக்க” கண்டிப்பாக இருக்கும். பெரிய குழுவில் இடக்க எண்ணிக்கை இரண்டோ அல்லது மூன்றோ ஆகிறது.

மத்தளம்












திமில
 
                    











இடக்க













இலத்தாலம்













கொம்பு










சங்கு

                      

பஞ்ச வாத்தியத்தின் தொடக்கத்தின் அடையாளமாக “சங்க நாதம்” முழங்கப்படும். இது ஒரு மங்கள நிகழ்வின் தொடக்கம் என அருகில் உள்ளவருக்கும், ஊராருக்கும் அறிவிப்பதாகும். சங்க நாதம் இரு முறை “ஓம்” என ஒலித்து மூன்றாவது முறை ஒலிப்பதற்கான கால அட்டவணையில் முக்கால் பங்கு கடக்கையில் கொம்பு தவிர ஏனைய “மத்தளம், திமில, இடக்க, இலத்தாலம்,” ஆகியவை ஒரு சேர “ஓம்” எனும் ஒளியை எழுப்பும். இதன் பொருள் எல்லாவற்றிற்கும் துவக்கம் “ஓம்” எனவும் “ஓம்” மங்களத்தின் அடையாளம் எனவும் ஆகும்.

மேலே சொன்னது போல் பஞ்ச வாத்தியத்தின் தாள கட்டமைப்பு பிரமிட் வடிவத்தில் 10 காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  முதல் காலம் 896 அக்ஷர காலங்களில் தொடங்கி, 10வது காலத்தில் 1 ¾ அக்ஷர காலத்தில் நிறைவுறுகிறது. இந்த பத்து காலங்களும் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

1, 2 மற்றும் காலங்கள் மெதுவாக, நிதானமான தாள கட்டமைப்பை உடையது. இது “பதி களம்” அல்லது “பதி காலம்” என்று கூறப்படும்.

4, 5 மற்றும் 6 காலங்கள் மத்திய தாள கட்டமைப்பை உடையது. இது “மத்ய களம்” அல்லது “மத்ய காலம்” என்று கூறப்படும்.

7, 8, 9 மற்றும் 10 காலங்கள் உச்ச பட்ச தாள கட்டமைப்பை உடையது. இது “திருத களம்” அல்லது “திருத காலம்” என்று கூறப்படும். "திஸ்ர" என்றும் கூறப்படுவதுண்டு.

“பதி களம்” முடிய பதினைந்து நிமிடங்கள் வரை பிடிக்கும். நிகழ்ச்சியின் மொத்த நேரத்தை கணக்கிட்டு “பிரமாணி” என்பவர் “பதி களம்” இசைக்கப்படும்போது மொத்த நிகழ்ச்சியின் போக்கை தீர்மானிப்பார். 

நீண்ட தாளங்கள் முதல் அல்லது இரண்டாம் காலத்திலும் குறுகிய தாளங்கள் மூன்றாம் மற்றும் நான்காம் காலத்திலும் தொடங்கும். இந்த காலங்கள் “அடந்த” எனும் தாளத்தில் அமைந்தது என்றாலும் “செம்பட” தாளத்தின் ஆதிக்கம் கடைசி சில தாளங்கள் வரை இருக்கத்தான் செய்கிறது. நிதான கதியில் தொடங்கி துரித கதியை அடையும் இந்த இசை “த்ரிபுட” என்ற தாளத்தை இறுக்கமாக பற்றி கொண்டு இறுதியில் பேரொலி நிலையிலிருந்து இறங்கி ரம்மியமாக நிறைவுறுகிறது. 

பஞ்ச வாத்தியத்தின் இறுதியில் “திமில” கருவிகள் எல்லாம் சேர்ந்து “திமில எடச்சில்” எனும் அருமையான “செம்பட” தாளத்தில் அமைந்த தாள கட்டையை “இளத்தாலம்” உதவியுடன் “வேகம்” “ஒலி” “திறமை” என்ற கூட்டு கலவையாக வழங்குவது அருமையான ஒரு அனுபவம்.  

கேரள மாநிலத்தில் நடைப்பெறும் திருவிழாக்களில் முக்கியமானதான திருச்சூர் பூரம், உத்ராளிக்காவு பூரம், நம்மார வல்லங்கி வேல, சினக்காத்தூர் பூரம், மன்னார்க்காடு பூரம், திருமாந்தான்குன்னு காவு பூரம், அடூர் கஜமேலா, பெருவனம் பூரம், திருஅனந்தபுரம் பைங்குனி (பங்குனி) உத்சவம், வைக்கத்து அஷ்டமி, குருவாயூர் ஏகாதசி போன்ற விழாக்களில் இந்த இசை துறையை சேர்ந்த பல ஜாம்பவான்கள் இசைப்பதை தாங்கள் இறைவனுக்கு செய்யும் இசை காணிக்கையாக கருதுகின்றனர்.

சபரி மலையில் நடைபெறும் கொடியேட்டு, உல்சவம், பைங்குனி (பங்குனி) உத்திரம், பிரதிஷ்டா தினம், நிரபுத்தரி ஆகிய விசேஷங்களில் வாத்திய கலைகளில்  முக்கியமாக கருதப்படும் செம்பட மேளம், பஞ்ச வைத்தியம், செண்டை, தாயம்பக, பாஞ்சாரி, சிங்காரி என பல வகை வாத்தியங்கள் இசைக்கப்படும். இவைகளில் பஞ்ச வாத்தியம், தாயம்பக, ஷோபான சங்கீதம் ஆகியவை முக்கிய இடத்தை பெறுகிறது. பல வருடங்களுக்கு முன் (இப்போது உள்ளதா என்று தெரியவில்லை) சபரி மலை சன்னிதானத்தின் முன் ஷோபான சங்கீதம் இசைப்பவர்கள், நெஞ்சுருகி, கண்ணீர் மல்க பாடும் அந்த சூழல் நெஞ்சுக்கு நெருக்கமானது. 

இந்த கானொளியில் திமிலை வித்துவான் திரு.கோங்காடு விஜயன் (கருப்பு வேட்டியில் இருப்பவர்), எங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு கோயிலில் பஞ்சவாத்தியம் இசைக்கையில் பதியப்பட்டது. என் சிறு வயதில் அவர் திமிலை இசைப்பதையும், அவரது திமிலையை ஆர்வமாய் ஓடிப்போய் தொட்டு பார்த்த அந்த சில வினாடிகள்  இன்றும் மனதில் மறக்க முடியாத பசுமையாய். 




பஞ்ச வாத்தியம் நம் நெஞ்சை நிறைக்கட்டும்.